"அவ்வளவு தான்! முடிந்துவிட்டது.!" அடித்து நொறுக்கிய கொரோனா.. என்ட் கார்ட் போட்டதாக அறிவித்த பைடன்
வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கி 2.5 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த 2.5 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் நம்மை பாடாய் படுத்தி வருகிறது. உலக வல்லரசுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை எதுவும் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
இந்த கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என தொடர்ந்து உருமாறி, அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியதும் இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் சிக்கலைத் தந்தது.
சென்னையில் மீண்டும் பரவும் கொரோனா..பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்.. மாநகராட்சி உத்தரவு
கொரோனா
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஆல்பா, டெல்டா போன்ற கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. இதனால் ஒரு பக்கம் உயிரிழப்புகளும், மற்றொரு புறம் பொருளாதார பாதிப்பும் மறுபுறம் மிக மோசமாக ஏற்பட்டது. இதனால் அனைத்து நாடுகளுமே மிகவும் இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டன. பொருளாதார ரீதியாகவும் மோசமான இழப்புகளைச் சந்தித்தது.
அமெரிக்கா
கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது. கொரோனா பரவ தொடங்கிய போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் மிக மோசமாக இதைக் கையாண்டார். மாஸ்க் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவரே முறையாகப் பின்பற்றவில்லை. இதனால் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியது. ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்ற பின்னரே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மிக மோசம்
அமெரிக்காவில் 9.7 கோடி பேர் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 10 லட்சம் பேர் பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். அதேநேரம் அங்குக் கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு குறைந்தே வருகிறது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்குக் கீழும் தினசரி உயிரிழப்பு 40 என்ற அளவிலும் உள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் பைடன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
ஜோ பைடன்
அதாவது அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று முடிந்துவிட்டதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால் பெருந்தொற்று முடிந்துவிட்டது என்பதைத் தைரியமாக சொல்லலாம்" என்றார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் சமீபத்தில் தான் கொரோனா பரவல் முடியும் தருவாயில் உள்ளது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
முடிந்துவிட்டது
தொடர்ந்து பேசிய பைடன், "முன்பு இருந்ததை விட இப்போது நிலைமை எவ்வளவோ மேம்பட்டு உள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம். வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாலேயே மக்கள் மாஸ்க் அணிவதையும் குறைத்து உள்ளனர். என்னைக் கேட்டால் நிலைமை மாறி வருகிறது என்றே கூறுவேன். அதேநேரம் வைரஸ் பரவலை ஒழிக்க நாம் இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பெரிய தாக்கம்
இந்த கொரோனா அமெரிக்கர்களின் ஆன்மாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. மக்கள் தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பங்களைப் பற்றியும், தேசத்தின் நிலை பற்றியும், அவர்களின் சமூகங்களின் நிலை பற்றியும் எப்படி நினைக்கிறார்கள் என்பதையே இந்த வைரஸ் மாற்றிவிட்டது. கடந்த சில ஆண்டுகள் உண்மையில் நமக்கு மிக மிக கஷ்டமான ஒரு காலகட்டம்" என்றார்.
பொதுச்சுகாதார அவசர நிலை
அமெரிக்க அதிபர் பைடன் இப்படிக் கூறியுள்ள நிலையில், அதேநேரம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலையை விலக்கிக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று அமெரிக்கச் சுகாதாரத் துறை விளக்கம் அளித்து உள்ளது. வரும் அக்.13 வரை அங்கு பொதுச் சுகாதார நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. வேக்சின் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பைடனின் இந்தக் கருத்து முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.