"60,000 மரணங்கள்.." சீனாவில் சில வாரங்களில் எகிறிய கொரோனா மரணங்கள்.. டென்ஷனான உலக சுகாதார அமைப்பு
வாஷிங்டன்: சீனாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா உயிரிழப்புகள் உச்சம் தொட்டு வருகிறது. இதனிடையே சீனாவின் கொரோனா மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2020 முதல் கொரோனா வைரஸ் நம்மை எந்தளவுக்குப் பாடுபடுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். 2020இல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கொரோனா பாதிப்பு முடக்கிப் போட்டுவிட்டது.
கொரோனா வேக்சின் உட்பட பல்வேறு நடவடிக்கைகளால் நிலைமை இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால் உலகின் அனைத்து நாடுகளும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பின

கொரோனா
உலகின் அனைத்து நாடுகளும் ஏற்கனவே கொரோனா உடன் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டன. இதனால் சில மாதங்களாகவே அங்கும் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது. ஆனால், சீனாவில் இத்தனை காலம் அவர்கள் ஜீரோ கோவிட் கொள்கையைத் தான் கடைப்பிடித்து வந்தார்கள். அதாவது சிறிய கொரோனா பாதிப்பு இருந்தாலே.. அங்கு ஒட்டுமொத்தமாக லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து விடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாகவே அங்குக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக இருந்தது. இதனால் அவர்களால் கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.

சீனா
ஆனால், இந்த ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து தீவிர போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதனால் அந்நாட்டு அரசு வேறு வழியில்லாமல் கட்டுப்பாடுகளை நீக்கியது.. இப்படி ஒரே அடியாகக் கட்டுப்பாடுகளை நீக்கியதும் வைரஸ் பாதிப்பு ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது. இத்தனை நாட்கள் யாருக்கும் அங்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் அவர்களுக்கு தடுப்பாற்றல் இல்லை.. சீனாவின் வேக்சினும் மேற்குலக நாட்டின் வேக்சின் அளவுக்குப் பலன் தரவில்லை.

உச்சத்தில் வைரஸ் பாதிப்பு
இதனால் கட்டுப்பாடுகளை நீக்கியவுடன் தீவிர பாதிப்பு மளமளவென அதிகரித்தது. தீவிர பாதிப்பால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்தது. இந்தச் சூழலில் சீனாவிடம் இருந்து கொரோனா பரவல் குறித்து வெளிவரும் தகவல்கள் துல்லியமாக இல்லை என்றும் இதனால் கொரோனா இறப்புகள் குறித்த தகவல்களை மேலும் துல்லியமாகக் கண்காணிக்குமாறும் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்குப் பரிந்துரை அளித்துள்ளது. அப்போது தான் கொரோனா பரவல் நிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்த உலக நாடுகளால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

60 ஆயிரம் மரணங்கள்
கடந்த மாதம் ஜீரோ கோவிட் கொள்கையை வாபஸ் பெற்றதில் இருந்து மட்டும் சுமார் 60,000 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. இது கொரோனா உயிரிழப்புகள் குறித்து சீனா முன்பு வெளியிட்ட தகவல்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். சீனா குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "சீனா கொரோனா உயிரிழப்புகள் குறித்த தனது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரவல் குறித்த புரிதல்களைப் பெறச் சீனாவிடம் இருந்து மேலும் துல்லியமான டேட்டாக்கள் தேவை.

துல்லிய டேட்டா தேவை
குறிப்பாக வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்து சுகாதார கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது துல்லியமான டேட்டா தேவை.. சீன அதிகாரிகளிடம் விரைவில் இது குறித்து அடுத்தகட்ட மீட்டிங்கை நடத்த உள்ளோம். அதுவரை சீன அதிகாரிகளிடம் இணைந்து பணியாற்றி கொரோனா பரவல் குறித்த தகவல்களைப் பெறுவோம்" என்று கூறினர். சீனாவில் இப்போது இருக்கும் கொரோனா சூழல் குறித்து உலக சுகாதார அமைப்பின் டெட்ரோஸ் அதானோம் கடந்த வாரம் தான் சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் இயக்குநரிடம் நேரடியாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு
கொரோனா பரவல் குறித்து சீனா வெளிப்படையாகத் தகவல்களை வெளியிட மறுப்பதாக உலக சுகாதார அமைப்பு தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாகக் கூறி வந்தன. அதன் பின்னரே கடந்த சனிக்கிழமை கொரோனா பாதிப்பு குறித்தும் சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்கள் குறித்தும் சீனா வெளிப்படையாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு இப்படி வெளிப்படையாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பின்னரே சீனா கொரோனா குறித்த கூடுதல் டேட்டாக்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications