ஜாம்பியா அதிபருக்கு தந்த முக்கியத்துவம் கூட மோடிக்கு தரவில்லை.. அலட்சியப்படுத்தினாரா கமலா ஹாரிஸ்?
வாஷிங்டன்: பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து கமலா ஹாரிஸ் தனது துணை அதிபருக்கான அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்திலோ, தன்னுடைய சொந்த ட்விட்டர் பக்கத்திலோ சந்திப்பு முடிந்து 22 மணி நேரம் வரை பதிவு போடாமல் இருந்தது பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இதன்பிறகு, பிரதமர் மோடிதான் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு படங்களையும் வெளியிட்டிருந்தார்.

ஜாம்பியா தலைவர் பற்றி ட்வீட்
130 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆனால் இந்திய பிரதமருடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை தவிர்த்த கமலா ஹாரிஸ், மோடி சந்திப்புக்குப் பின் நடைபெற்ற ஜாம்பியா என்ற சிறிய நாட்டின் அதிபருடனான தனது சந்திப்பு பற்றிய விவரங்களையும் வீடியோவையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது உலக அளவில் பேசுபொருளாக மாறியது.

சுப்பிரமணியன் சுவாமி
சமூக வலைத் தளங்கள் முழுவதும் இது விவாதமான நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியின் கமலா ஹாரிஸ் சந்திப்பு குறித்த ட்விட்டுக்கு பின்னூட்டம் பதிவிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, இதேபோல கமலா ஹாரிஸ் இந்த சந்திப்பு பற்றி ட்விட் செய்துள்ளாரா? மோடிக்கு பின்னர் சந்தித்த ஆப்பிரிக்க நாட்டு அதிபர் சந்திப்பு பற்றியெல்லாம் ட்விட் செய்துள்ள கமலா ஹாரிஸ் அதற்கு முன் நடந்த மோடியின் சந்திப்பு குறித்து பதிவிட்டதாக நான் பார்க்க வில்லை என்று தெரிவித்தார்.

அவமதிப்பு
இதன் மூலம் சர்வதேச அரங்கத்தில் இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவமதித்து விட்டாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சை பெரிதான பிறகு, கமலா ஹாரிஸ், மோடி சந்திப்பு தொடர்பான வீடியோவை ட்வீட் செய்துள்ளார். அதாவது சந்திப்பு நடந்த 22 மணி நேரங்களுக்கு பிறகுதான் கமலா ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video

மோடியுடன் சந்திப்பு என ட்வீட்
கமலா ஹாரிஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருந்தது. இணைந்து பணியாற்றுவதன் மூலம், கொரோனா தொற்றுநோய், காலநிலை நெருக்கடி, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளில் நாம் முன்னேற முடியும். இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி கிண்டல்
முன்னதாக சுப்பிரமணியன் சுவாமி, இந்த விவகாரத்தில் அதிக அக்கறையோடு செயல்பட்டதை பார்க்க முடிந்தது. இந்திய பிரதமர் பற்றி கமலா ஹாரிஸ் ட்வீட் போடவில்லை என்று நெட்டிசன்கள் பகிர்ந்த ட்வீட்டை சு.சாமி ரீடிவிட் செய்திருந்தார். கமலா ஹாரிஸ் வீடியோ வெளியிட்ட நிலையில், இப்போது சு.சாமி என்ன செய்வார் என்று மோடி ஆதரவாளர்கள் பதில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications