பணக்கார நாடுகள் இந்தியாவுக்கு பெரிய அளவில் உதவத் தவறி விட்டன.. அமெரிக்கா வேதனை!
வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் இந்தியாவுக்கு உலக நாடுகள் போதுமான ஆதரவை தர தவறிவிட்டதாக வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆன்டனி பவுசி வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. தலைநகர் டெல்லியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் இல்லாமலும் கொரோனா நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் சடலங்களை தகனம் செய்ய இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பூட்டான், சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை அளிக்க முன்வந்துள்ளன.
இந்த நிலையில் இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆன்டனி பவுசி கூறுகையில் கொரோனா வைரஸை எதிர்த்து இந்தியா போராடி கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்க தவறிவிட்டன.
லேசான கொரோனா பாதிப்பு இருந்தால்.. உடனே மருத்துவமனைக்கு ஓட தேவையில்லை.. இதை செய்யுங்கள் போதும்
ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம், தடுப்பூசி மூலப்பொருட்கள் ஆகியவற்றை அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்புகிறது. இது போல் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு உதவுவது பெரிய நாடுகளின் பொறுப்பாகும். போதிய ஆக்ஸிஜன் இல்லாமலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் மக்கள் இறக்கும் கொடூரமான சூழல் இந்தியாவில் நிலவுகிறது.
எங்களால் முடிந்தவரை பொது சுகாதார பிரச்சினைகள் வரும் போது எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம் என பவுசி தெரிவித்தார்.