நாயை பலூனில் கட்டி பறக்க விட்டாரே யூடியூப்பர்.. இப்போ என்ன வம்பு செய்தார் தெரியுமா? அதிரடி கைது
மதுரா: நாயை பலூனில் கட்டி பறக்க விட்டு அதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய டெல்லியைச் சேர்ந்த கவுரவ் சர்மா என்ற யூடியூப்பர், இப்போது தடை செய்யப்பட்ட வழிபாட்டு தலத்தில் வீடியோ எடுத்து போலீசில் சிக்கியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் கவுரவ் சர்மா. கவுரவ்ஸோன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். யூடியூப்பில் அதிக வியூஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக எதை எதையோ வெளியிடுவோர் லிஸ்டில் இவரும் ஒருவர்.
சமீபத்தில் தனது டோலர் என்ற செல்ல நாயை இப்படித்தான் இவர் பாடாய் படுத்தி விட்டார்.

நாய் உடலில் பலூன்
டோலர் உடல் முழுக்க பலூன்களை கட்டி அதை பறக்க விட்டு, அதை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் போட்டார் சர்மா. நல்லா வியூஸ் வரும் என்று நினைத்தவருக்கு வந்ததெல்லாம், வறுவல்கள்தான். வாயில்லா ஜீவனை இப்படி கொடுமைப்படுத்துகிறாயே, நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு கிழித்து தோரணம் கட்டினார்கள் மக்கள். இதனால் நைசாக அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு மன்னிப்பு கேட்டார்.

பிருந்தாவனம்
இருப்பினும், யூடியூப் வியூஸ் ஆசை விடுமா. விடவில்லை சர்மாவுக்கு. அதனால்தான், இப்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பிருந்தாவன் உள்ளது. இங்குதான் கண்ணன் பிறந்து வளர்ந்தார் என்பதை இந்துக்கள் நம்பிக்கையாகும்.

மதுரா
இந்த பகுதியில், நிதிவன் ராஜ் என்ற இடம் உள்ளது. கிருஷ்ணர்-ராதா ஆகியோர் ராஜலீலை நடத்தும் இடம் இது என்ற நம்பிக்கையுள்ளதால், இங்கு இரவு நேரங்களில் யாருக்கும் செல்ல அனுமதி கிடையாது. ஆனால் கவுரவ் சர்மா, இரவு நேரத்தில் இங்கே சென்று, வீடியோ எடுத்துள்ளார். நவம்பர் 9ம் தேதி, இந்த வீடியோவை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்ததும் மக்கள் திட்ட ஆரம்பிக்க விஷயம் பெரிதானதும் டெலிட் செய்து விட்டார்.

பாய்ந்த வழக்குகள்
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்று வீடியோ எடுத்தது, இந்து மத உணர்வுகளை புண்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் டெல்லியில் வைத்து கவுரவ் சர்மா கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது உறவினர் பிரசாந்த், நண்பர்கள் மோகித் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் சென்று சூட்டிங் எடுத்ததாக கூறியுள்ளார். இதனிடையே கவுரவ் சர்மா நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நிதிவன் ராஜின் சாமியார், ரோஹித் கோஷ்வாமியின் புகாரின் பேரில், விருந்தாவன் காவல் நிலையத்தில் ஐபிசியின் பிரிவு 295 ஏ மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications