ஐப்பசி பவுர்ணமி: 1000 கிலோ அன்னம்..700 கிலோ காய்கறிகள்..பிரகதீஸ்வரருக்கு பிரம்மாண்ட அன்னாபிஷேகம்
தஞ்சாவூர்: பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம், 700 கிலோ காய்கறிகளாலும் சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அன்னாபிஷேக விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ்பெற்ற சிறந்த பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி கட்டிட கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம், அதைப்போல் இந்தாண்டும் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ராஜ ராஜ சோழன் 1037வது சதய விழா..யானை மீது வைத்து திருமுறைகள் ஊர்வலம்..பெருவுடையாருக்கு பேரபிஷேகம்
பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்
சுமார் 1000 கிலோ அன்னம் மற்றும் கேரட், கத்திரிக்காய், வாழைப்பூ, பூசணி, முள்ளங்கி, பீட்ருட், வெண்டைக்காய், புடலங்காய் உள்ளிட்ட 700 கிலோ காய்கறிகள் கொண்டும் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது, இந்த அன்னாபிஷேகம் உலக மக்கள் நலன் பெறவேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது.
பக்தர்களுக்கு பிரசாதம்
அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும். இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
கங்கை கொண்ட சோழபுரம்
உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற இக்கோவிலானது தற்போது உலக புராதான சின்னமாக திகழ்ந்து வருகிறது. இப்படி வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அதாவது ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று அன்னாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விமர்சையாக நடைபெறாமல் சாதாரணமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு அன்னாபிஷேக விழாவானது விமர்சையாக நடைபெற்றது.
2500 கிலோ பச்சரிசியால் உணவு
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேங்களுடன் விழாவானது தொடங்கி, நேற்று சனிக்கிழமை மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான அன்னாபிஷேக விழாவானது இன்று திங்கள் கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி உள்ளது. தற்போது அன்னாபிஷேக விழாவானது 100 மூட்டை அதாவது 2500 கிலோ பச்சரிசியை கொண்டு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட நீராவி அடுப்பைக் கொண்டு கோவில் வளாகத்தில் சாதம் தயார் செய்யப்பட்டு மூலஸ்தானத்திற்கு எந்திரம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. தயார் செய்யப்பட்ட சாதத்தினை ஆசியாவிலேயே மிகப்பெரிய லிங்கமாக கருதக்கூடிய அதாவது இந்த லிங்கமானது சுமார் 60 அடி சுற்றளவும் 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லினால் ஆன சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.
சிவனாக மாறிய அன்னம்
அன்னாபிஷேகத்தின் போது ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கூறப்படுவதும், இதனால் கோடிக்கணக்கான லிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசிப்பது கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாக கூறப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் நடைபெற்றதை ஏராளமான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் பிரகதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதனையடுத்து மஹா பஞ்ச தீபாராதனையும், 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீதம் உள்ள சாதத்தினை இங்கு இருக்கக்கூடிய ஆறு, ஏரி குளங்களில் மீன்களுக்கு உணவாகவும் அளிக்கப்படுகிறது.
திரண்ட பக்தர்கள்
வரலாற்று சிறப்புமிக்க அன்னாபிஷேக விழாவை காண்பதற்காக அரியலூர், தஞ்சாவூர், கடலூர் பாண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவனடியார் பெருமக்கள் மற்றும் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அன்னாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறை மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.