ஐப்பசி துலா ஸ்தானம்..கடைமுக தீர்த்தவாரி..மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
மயிலாடுதுறை: ஐப்பசி மாத கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள்.
ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும் என்பது நம்பிக்கை.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

துலா கட்ட உற்சவம்
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1ஆம் தேதி துலா உற்சவம் தொடங்கியது.

காவிரியில் புனித நீராடல்
மயிலாடுதுறையின் காவிரித்துறையின் பெயர் துலாக்கட்டம் எனப் போற்றப்படுகிறது. மயிலாடுதுறையின் பெருந் திருவிழாவின் பெயர் துலா உற்சவம் என்றே அழைக்கப்படுகிறது. துலா மாதத்தில் வரும் கடைமுழுக்கு தீர்த்தவாரித் திருவிழா, ஸ்ரீமயூரநாதர் அபயாம்பிகையின் வருடாந்திரத் திருவிழாவில், மிக முக்கியமான வைபவமாகப் போற்றப்படுகிறது.

தீர்த்தவாரி உற்சவம்
மாதம் முழுதும் காவிரியில் தீர்த்தமாடும் இறைவன் மாதத்தின் கடைசி நாளான ஐப்பசி 30ஆம் நாள் கடைமுக தீர்த்தவாரி காண்பதாக ஐதீகம். இதுவே மயிலாடுதுறையில், முக்கியமான திருவிழாவாகப் போற்றி கொண்டாடப்படுகிறது.

திருக்கல்யாண தேரோட்டம்
10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான திருக்கல்யாணம் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கடைமுக தீர்த்தவாரி
கடைமுக தீர்த்தவாரி 16ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மயிலாடுதுறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை
பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் 16ஆம் தேதி புதன்கிழமை கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications