சபரிமலையில் எங்கும் ஒலிக்கும் சரணகோஷம்..பக்தர்கள் பாதுகாப்புக்காக வரும் இந்திய ரிசர்வ் பட்டாலியன்
சபரிமலை: பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என கேரளா மாநில டிஜிபி அனில்காந்த் கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் பட்டாலியனின் கூடுதல் போலீசார் வரும் 18ம் தேதி பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் டிஜிபி அனில் காந்த் தெரிவித்துள்ளார்.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சபரிமலை சன்னிதானம், மாளிகைப்புரம், 18ம் படி ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரளா டிஜிபி அனில் காந்த், சபரிமலையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர், சன்னிதானத்தில் காவலர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் கேன்டீனை பார்வையிட்டார். தென் மண்டல ஐஜி பிரகாஷ், சன்னிதானம் சிறப்பு அதிகாரி ஆனந்த், பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை தலைவர் ஸ்வப்னில் மகாஜன் ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அனில் காந்த், சபரிமலையில் வரும் நாட்களில் அதிகளவான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, ஐயப்ப பக்தர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை கூடுதல் பாதுகாப்பிற்காக இந்திய ரிசர்வ் பட்டாலியன் வரவழைக்கப்பட்டிருப்பதாக கேரள டிஜிபி அனில் காந்த் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சபரிமலையில் 18ஆம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் வீதம் ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை மேலே சென்று சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது. நாள்தோறும் சபரிமலைக்கு 90,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வருவதால் தேவசம்போர்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சபரிமலையில் இன்று 90,827 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.
காட்டுப் பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு அதிக வசதிகள் செய்து தரப்படும். மேலும், ஐயப்ப தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் தாமதமாகாமல் இருக்க, தரிசனம் முடித்த பக்தர்கள் மேம்பாலம் வழியாக திரும்பிச் செல்லவும் வசதி செய்து தரப்படும் என டிஜிபி அனில்காந்த் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 19.38 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். அடுத்த இரு நாள்களும் வார இறுதி நாள்கள் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தைத் தாண்டும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால் நாளை மறுநாள் 19ந்தேதி அன்று ஆன்லைன் புக்கிங் இல்லை என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும், அன்றைய நாளில் முன்பதிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முன்பு முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் அன்றைய நாளில் தரிசனம் செய்ய அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications