தீபத்திருநாள்..அண்ணாமலையார் மலை மீது ஏற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி..என்னென்ன கட்டுப்பாடுகள்
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருநாளில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வரும் 6ஆம் தேதி காலை 06.00 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மலையேற அனுமதி கேட்கும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் தீப திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரியும் காலையும் மாலையும் பஞ்ச மூர்த்திகள் உலா வந்து அருள் பாலிக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி இந்த ஆண்டு தீப திருவிழா நடைபெறுகிறது.
தீபத்திருவிழாவின் 5ம் நாள் உற்சவத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. காலை 11 மணியளவில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
'ரிஷப’ ராசி இல்லை போல! மீண்டும் மோதிய மாடு.. டேமேஜான வந்தே பாரத் ரயில்! இதுக்கு எண்டே இல்லையா?
வெள்ளி ரிஷப வாகனம்
வண்ண மின் அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்தனர். தீபத்திருவிழா உற்சவத்தின்போது, அண்ணாமலையார் பவனி வரும் வாகனங்களில் மிக பிரமாண்டமானது வெள்ளி பெரிய ரிஷப வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளைய தினம் மகா தேரோட்டம் நடைபெற உள்ளது.
அனுமதி சீட்டு
தீபத்திருவிழா அன்று காலை 06.00 மணிக்கு செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சீட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக (Queue System) அனுமதி சீட்டு மேற்குறிப்பிட்ட சிறப்பு மையத்தில் வழங்கப்படும்.
அடையாள அட்டை
மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம். பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.
தண்ணீர் பாட்டில் மட்டுமே
06.12.2022 அன்று பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப் படுவார்கள். மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும் போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
நெய் ஊற்ற அனுமதி
மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும், வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது. மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மலை மீது மகா தீபம்
டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக 200 கிலோ எடை கொண்ட 5 அடி உயரம் கொண்ட கொப்பரை பயன்படுத்தப்படும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் காட்சியளித்ததும் சரியாக மாலை 6 மணிக்கு அகண்ட தீபம் ஏற்றப்பட்டு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் தீப திருவிழாவை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.