திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 17: இறைவனைத் தேடி கோயிலுக்கு செல்ல வேண்டியதில்லை
திருப்பாவை - பாடல் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: ஆடையும் தண்ணீரையும் உணவையும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் நந்தகோபாலனே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடி போன்று இடைகளை கொண்ட பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! நீ எழ வேண்டும்! மகாபலி தானம் தந்தேன் என்று தாரை வார்க்கும் நீர் கீழே விழும் முன்பாக, 7 உலகங்களின் ஊடாகவும் வளர்ந்த ஓங்கி உலகளந்த கோமகனே! தேவதேவனே! என்று கண்ணனை எழுப்புகிறார்கள். செம்மையான உனது பாதத்தில் பொற்கழலை அணிந்த செல்வனே, பலராமா நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்காமல் எழுந்திருப்பீர்களாக! பலராமன் கண்ணனுக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்து விட்டதால், கண்ணன் அவனிடம் பவ்யம் காட்டுகிறான். அதனால் பலராமனை கட்டி அணைத்து தூங்குகிறானாம். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தூங்கும் அழகை அனுபவித்து ஆச்சர்யப்பட்டு மகிழ்கிறார்கள் கோபியர்கள்.

விளக்கம்: திருப்பாவை பாடுபவர்கள்தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்ற இந்த பாடல் உணர்த்தும் கருத்து!
திருவெம்பாவை பாடல் - 17
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: நறுமணம் கொண்ட கருமையான கூந்தலை உடைய பெண்ணே! சிகப்பான கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முகனிடத்தும் பிற தேவர்களிடத்தும் எங்கும் மற்றவர்களிடத்தில் இல்லாத ஒப்பற்ற ஆனந்தம் அடையும் படி நம்மை பெருமைப்படுத்தி இந்த மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் நம் வீடுகளில் வந்து எழுந்தருளுக! அந்த சிவனை வணங்கி நலம் பெறும் வகையில் தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்!
விளக்கம்: இறைவனை தேடி கோயிலுக்குச் செல்ல வேண்டியதில்லை. அவரே வருகிறார். அவர் வரும் முன்பு நீராடி விட்டு ஓம் நமசிவாய என சொல்லுங்கள் , அப்போது அவர் நமக்கு சேவகம் செய்வார்.












Click it and Unblock the Notifications