பழனி முருகனுக்கு ஜன.27ல் கும்பாபிஷேகம்..16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் கடவுள் முருகனின் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி முருகன் கோவில். போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷான மூலவர் சிலையான தண்டாயுதபாணியை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கின்றனர்.
பழனியில் போகர் சித்தர், புலிப்பாணி சித்தர் ஜீவசமாதிகளும் உள்ளதால் ஏராளமானோர் முருகனை வழிபட்டதோடு ஜீவ சமாதிகளையும் வழிபட்டு செல்கின்றனர். தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம் என பிரசித்தி பெற்ற விழாக்கள் பழனியில் நடைபெறும்.

உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்த கும்பாபிஷேகம் 12 ஆண்டுகள் கழித்து அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை தொடங்கியது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.
இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜனவரி மாதம் பழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனையடுத்து பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. அதன்படி ராஜகோபுரத்தில் வர்ணம் பூசும் பணி நிறைவுற்றது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்ககோபுரம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெறும் எனவும் அறங்காவலர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18ஆம் தேதி காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 23ஆம்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26ஆம்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தைப்பூச திருவிழாவை கருத்தில் கொண்டு மண்டல பூஜை 3 நாட்கள் நடைபெறுகிறது. மூலவருக்கு மருந்து சாத்தும் தேதி துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குருக்கள்களுடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும். உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
கும்பாபிஷேகத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு என்றும் பழனி முருகன் கோவில் அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் கூறியுள்ளார்.
கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் பணிகள் கண்காணிக்கப்படும். இதேபோல் கும்பாபிஷேகத்துக்கு முன்பு கோவில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதுநீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கும்பாபிஷேகத்தன்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்க முடியும் என துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையுடன் இணைந்து கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு, பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications