பங்குனி அமாவாசை..திருவாலங்காடு புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் கை மேல் பலன்
புத்திர பாக்கியம் வேண்டுவோர் பங்குனி அமாவாசை நாளில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காட்டில் உள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க வேண்டும்.
மயிலாடுதுறை: இன்றைக்கு இளைய தலைமுறையினர் பலரும் புத்திர பாக்கியத்திற்காக தவமிருக்கின்றனர். ஆண்களில் உயிரணுக்கள் குறைபாடு பெண்களுக்கு கரு முட்டை உருவாவதில் உள்ள தடைகள் கரு குழாயில் ஏற்படும் அடைப்புகள் மலட்டுத்தன்மைக்கு காரணமாகின்றன. மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு ஆலயத்தில் புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி ஈசனை மனமுருகி வழிபட மலடியும் குழந்தை பெறுவாள் என்கிறது தல புராணம்.
இந்திரன் இத்தல தீர்த்தத்தில் நீராடி தன் மகன் ஜெயந்தனை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. பங்குனி மாத அமாவாசை தினத்தில் தீர்த்தமாடி இறைவனை வணங்க வேண்டும் என்று புராண கதை சொல்கிறது. இன்று பங்குனி அமாவாசை என்பதால் குழந்தை பேறு கிடைப்பதில் தடை உள்ளவர்கள் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள் திருவாலங்காடு திருத்தலம் சென்று வழிபட்டு வரலாம்.
மனிதனாக பிறந்த அனைவருக்கும் திருமணத்திற்கும் பின்னர் புத்திரபாக்கியம் தவறாது கிடைக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாக உள்ளது. அபிராமி பட்டரே பதினாறு பேறுகளைப் பற்றி கேட்கும் போது தவறாது சந்தான பாக்கியம் வேண்டும் என்று அன்னையிடம் வேண்டுகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பங்குனி அமாவாசை நாளில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரரை வணங்கலாம்.

பூர்வ புண்ணியம்
நாம் சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். ஜாதகத்தில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. இந்த ஐந்தாம் பாவத்தைக் கொண்டு, புத்திர விருத்தி, பூர்வீக சொத்துக்கள், புத்திரர்களால் ஏற்படும் சுக துக்கங்களை அறியலாம். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது. பெண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும்.

குழந்தை பாக்கியத்திற்கு தடை
பிறந்த ஜாதகத்தில் 5ம் அதிபதி 6, 8, 12ல் மறைந்திருந்தாலும் 5ம் அதிபதியையும், 5ம் வீட்டையும், குரு பகவானையும், சனி பார்வை செய்தாலும் திருமணம் நடைபெறும் காலங்களில் சர்ப கிரகங்களின் தசா புக்திகள் நடைபெற்றாலும், புத்திர பாக்கியம் அமைவதில் தாமதம் உண்டாகும். கருச்சிதைவு, கர்ப்பம் உண்டாவதில் தடை ஏற்படும்.

குழந்தை பாக்கியம் தரும் குரு
குரு புத்திர காரகன் ஆவார். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் செவ்வாய் பகவான். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.

புத்திர காமேஸ்வர தீர்த்தம்
மயிலாடுதுறை அருகே உள்ள திருவாலங்காடு வண்டார் குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரரை வணங்கினால் புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறது தல புராணம். இந்த ஆலயத்தின் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் எழுந்தருயிருக்கிறார். இத்தல தீர்த்தம் புத்திர காமேஸ்வர தீர்த்தம் ஆகும். இங்கு நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்துதான், அதிதீ புத்திரபாக்கியம் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்திரன் இத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, தன் மகன் ஜெயந்தனை பெற்றானாம்.

தல புராணம்
பரதன் என்னும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், திருவாலங்காடு திருத்தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, பசு நெய்யை கருவறை தீபத்தில் சேர்த்து வழிபட்டு வா. கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை அங்கு வழிபட மலடியும் குழந்தை பெறுவாள் என்று அருளினார். பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காக காத்திருந்து, திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர் என்கிறது தல வரலாறு.
மூன்றாம் குலோத்துங்கன் என்ற சோழ மன்னன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசன் மீது மிகுந்த பக்தி கொண்டவன். அந்தப் பக்தி மேலீட்டை யாவர்க்கும் உணர்த்தும் பொருட்டு தன் தலையில் திருவாலங்காட்டுப் பெருமான் திருவடியைச் சூடிக்கொண்டானாம்.

பங்குனி அமாவாசை தீர்த்தவாரி
புத்திரபாக்கியம் வேண்டி இங்கு வழிபட மிகச்சிறப்பான நாள் பங்குனி மாத அமாவாசைதான். இன்றைய தினம் இங்கு வந்து இத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை மூன்றுமுறை வலம் வந்து புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம். பங்குனி அமாவாசை நாளில்தான் புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் ஈசனுக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

புத்திரபாக்கியம் நிச்சயம்
குழந்தை பேறு வேண்டுவோர் இன்றைய தினம் புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்து வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டு பலனடையலாம். இத்தல இறைவனை வழிபட்ட பிறகு, அருகில் உள்ள திருவாவடுதுறை ஒப்பிலாமுலைநாயகி உடனுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள 'புத்திர தியாகேசர்' சன்னிதியில் வழிபட்டு பிரார்த்தனையை நிறைவு செய்யவேண்டும். அதன் மூலம் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறது ஆலய வரலாறு. நம்பிக்கையுடன் வணங்கினால் கை மேல் பலன் கிடைக்கும்.

தோஷங்கள் நீக்கும் பைரவர்
இங்குள்ள பைரவருக்கு அமாவாசை, அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு, வெள்ளியில் சிறிய நாய் காசு செய்து அதனைக் கருப்பு கயிற்றில் கட்டி தாயத்து செய்கிறார்கள். அதனை புத்திரகாமேஸ்வரர், பைரவர் காலடியில் வைத்து அர்ச்சனை செய்து அதனை எடுத்து குழந்தைகளுக்கு அணிவித்து விட்டால் குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷங்கள் அண்டாது. பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெற இன்றே புத்திரகாமேஸ்வரரை வழிபடுங்கள்.












Click it and Unblock the Notifications