சபரிமலையில் நெருங்கும் மண்டலபூஜை..ஐயப்பனை தரிசிக்க குவியும் பக்தர்கள்..23ல் தங்க அங்கி ஊர்வலம்
சபரிமலை: ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கன்னிசாமிகளின் வருகை அதிகரித்துவருவதை அங்குள்ள சரங்குத்தி ஆலமரம் உணர்த்துகிறது. மண்டல பூஜை நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது.
கார்த்திகை மாத பிறப்பு மண்டலபூஜை காலத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. தினசரியும் பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு தங்க அங்கி வரும் 23ஆம்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட உள்ளது.
27ஆம் தேதி தங்க அங்கி பம்பையில் இருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 18ஆம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

தொடர்ந்து 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். மண்டல பூஜை நாளில் ஐயப்பனை தரிசனம் செய்ய காண கண் கோடி வேண்டும். மண்டல பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.
முதன்முறையாக ஐயப்பனை காண மலைக்கு வருபவர் கன்னிசாமி என்றழைக்கப்படுகிறார். இந்தக் கன்னிசாமிகள் ஆடி முடித்ததும் சரக்கோலும் கருப்பு நாடாவும் கொண்டு செல்வார்கள். சரங்குத்தி என்ற இடத்தில் உள்ள மரத்தில் குத்தி விட்டு கறுப்பு நாடாவை மரத்தடியில் வைத்து விட்டு செல்வார்கள். இது கன்னி சாமிகள் செய்ய வேண்டிய மிக முக்கியமான சடங்காகும். இந்த ஆண்டு கன்னிசாமிகள் வருகை அதிகரித்து வருகிறது. அதனை அங்கு சரங்குத்தியில் குவிந்துள்ள குச்சிகளே எடுத்துக்கூறுகின்றன.
பிரம்மச்சாரி ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் மஞ்சள்மாதாவிற்கு கன்னிச்சாமி ஐயப்பனை காண வந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் உணர்த்தலாம். மஞ்சள்மாதாவுக்கும் மணிகண்ட சுவாமிக்கும் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமே இதுதானே. எந்த ஆண்டு என்னை தரிசிக்க கன்னிச்சாமி வரவில்லையோ அந்த ஆண்டில் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றுதானே மஞ்சள்மாதாவிற்கு கூறியுள்ளார் ஐயப்பன். எனவே ஐயப்பனுக்காக காத்திருக்கும் மஞ்சள்மாதாவுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, சரக்கோலுடனும் கருப்பு நாடாவுடன் வந்து சரங்குத்தியில் தங்களின் வருகையை தெரியப்படுத்துகிறார். இங்கு வந்து பார்க்கும் மஞ்சள் மாதா ஏக்கத்துடன் திரும்பி சென்று விடுவாராம்.
சரங்குத்தி கடந்தால் வருவது சபரிமலை சாஸ்தாவின் பொன்னு பதினெட்டாம்படிகள். இந்த பதினெட்டு படிகளைக் கடந்து சன்னிதானத்தில் தவநிலையில் இருக்கும் ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள், தாங்கள் கடந்துவந்த வலிகள், கஷ்டங்களை எல்லாம் மறந்து சாமியே சரணம் ஐயப்பா... என்று எழுப்பும் சரணகோஷத்தில் மலையே அதிரும். ஐயப்பனை கண்டதில் மனம் நிறைந்த பக்தர்கள் காடு மலை கடந்து கஷ்டங்கள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து வருவது இதனால்தான்.
இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக இன்னும் சில நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஐயப்பன் கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்களை வழியில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 33 நாட்களில் 21,70,548 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
27ஆம் தேதி மண்டலபூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜை முடிந்த உடன் ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30ஆம்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் ஐயப்பன். வானில் மகர நட்சத்திரம் உதிக்கும் நாளில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி ஒளிரும். அதைக்கண்ட ஐயப்ப பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் கேட்டு பலருக்கும் மெய் சிலிர்க்கும்.












Click it and Unblock the Notifications