தை அமாவாசை.. சென்னை முதல் குமரி வரை புனித நீர் நிலைகளில் குவிந்த மக்கள்..முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி தம்முடன் வாழ்ந்து மறைந்த முனனோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். வீடுகளில் முன்னோர்களின் படங்களுக்கு படையலிட்டு காக்கைக்கு உணவு படைத்து விட்டு உறவினர்களுக்கு அன்னதானம் அளித்தனர்.
அமாவாசை தினம் தந்தை காரகன் சூரியனும் தாய் காரகன் சந்திரனும் ஒரே ராசியில் சந்திக்கும் போது ஏற்படுகிறது. 30 திதிகளில் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏற்ற திதி. இந்த நாளில் நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம். புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து படையலிட்டு எள்ளும் தண்ணீரும் அளித்து வழிபடுவார்கள்.
வருடந்தோறும் அமாவாசை திதிகளில் தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும். நம்முடைய பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வரும் தை அமாவாசை நாளில் நாம் மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
தை அமாவாசை..ராமேஸ்வரத்தில் தீர்த்தவாரி..குவிந்த பக்தர்கள்..பகல் முழுவதும் கோவில் திறப்பு
பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம்.
தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.இந்த ஆண்டு தை அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஆகிய தீர்த்தங்களில் அதிகாலையிலேயே குவிந்த ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். எள் பச்சரிசி தர்ப்பபை வைத்து வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுத்தனர்.
சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். தை அமாவாசை தினமான இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும் பாபாநாசத்திலும் குவிந்த ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.தை அமாவாசை தினமான இன்று திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபங்களால் நெல்லையப்பர் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும்.