தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை இந்த தீபம் ஏற்றி வணங்குங்கள்.. மன அமைதியும் நிம்மதியும் உண்டாகும்
மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வ வளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
சென்னை: வாழ்க்கையில் பலருக்கும் பலவித கஷ்டங்கள் இருக்கும். எத்தனையோ துன்பங்கள் வாட்டி வதைக்கும். மன அமைதியின்றி தவிப்பார்கள். கடன் தொல்லை கழுத்தை நெறிக்கும் போது கடவுளே என்று சரணடைவார்கள். அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து மன அமைதி தரும் கடவுளாக இருக்கிறார் காலபைரவர். தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்கினால் துன்பங்கள் நீங்கி மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. தேய்பிறை அஷ்டமி தினமான இன்று பைரவரை எப்படி வணங்காலாம் என்று பார்க்கலாம்.
ஈசன் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்லை; தேவைப்படும் போது தனது சக்தியின் ஒரு சிறுபகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்; அப்படி ஒரு முறை வெளிப்படுத்திய சிறுபகுதி சக்திதான் கால தேவன் என்ற மஹா கால பைரவப் பெருமான் ஆவார்.
சனி பெயர்ச்சி 2022: அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்கள் நீங்குமா - விருச்சிக ராசிக்கு என்ன தருவார்?
கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி அன்று மஹா கால பைரவப் பெருமான் ஈசனிடம் இருந்து உதயமானார்; மஹாதேவ அஷ்டமியாக இன்றுவரை யோகிகளினால் துதிக்கப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி நாள் முழுவதும் "ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ" என்று மந்திரம் ஜபித்தால் நமது இப்பிறவியில் செய்த அனைத்து பாவங்களும் நம்மைவிட்டு ஓடிவிடும் என்று சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் தெரிவித்திருக்கின்றார்.
கால பைரவர்
சிவப்பு நிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல திருப்பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
சுக்கிர தோஷம் நீங்கும்
அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது.
சிவப்பு நிற ஆடை
அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும்.
எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் அடிஎடுத்து வைக்காது விலகி ஓடும். விலகும் என்று சொல்லப்படுகிறது.
மிளகு தீபம்
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் எவ்வளவு பெரிய கடன் தொகையில் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து உடனடியாக மீண்டு விடுவார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும், பைரவரை மனதார வழிபட்டு செவ்வரளி மலர் சாற்றினால் இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவார்கள் என்பது நம்பிக்கை. அது போல பகைவர்கள் தொல்லைகளால் அவதிப்படுபவர்களும் பைரவர் சன்னிதிக்குச் சென்று அவருக்கு அபிஷேகம் செய்து அவருடைய விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டாலே போதும், பகைவர்கள் உங்களை நெருங்க கூட மாட்டார்கள்.
அட்ட வீரட்டானங்கள்
முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,மஹா கால பைரவப் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன; இந்த எட்டு படைவீடுகளிலும் வெவ்வேறு கால கட்டங்களில் தமது வீரதீர பராக்கிரமங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதில் ஏதாவது ஒரு படைவீட்டில் தேய்பிறை அஷ்டமி அன்று குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை ஜபிக்கலாம். திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 8 வது கி மீ தொலைவில் உள்ளது. திருக்கோவிலூர், திருவதிகை, திருவிற்குடி வீரட்டேஸ்வரர் திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் 3 கி மீ பயணித்து அதன் பிறகு இருக்கும் உள்ளடங்கிய கிராமத்துச் சாலையில் உள்ளது. திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தி. வழுவூர் வீரட்டானம் அருள்மிகு பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 கி மீ தொலைவில் ள்ளது. செம்பொனார் கோவில். கொறுக்கை என்ற குறுக்கைமயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ தொலைவில் உள்ளது. ஒன்பதாவதாக சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயம். இந்த எட்டு வீரட்டானங்களிலும் மூலவர் சிவலிங்கமாக இருக்கின்றது; சிவலிங்க வடிவில் மஹா கால பைரவப் பெருமான் அருள் பாலித்து வருகின்றார். ஈசனும், பைரவரும் ஒருவரே என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றார்.
பைரவர் வழிபாடு
பூமியில் இருக்கும் அனைத்து கால பைரவ சன்னதிகளுக்கும் அருளாற்றலை வழங்கும் ஓர் ஆலயம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவில், சோழாபுரம், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கே பைரவ அஷ்டமி அன்று அன்று ஈசனுக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடைபெறும். செல்வ வளம் வேண்டுவோர் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை இந்த நாளில் அவர் சன்னதிக்குச் சென்று மூலமந்திரத்தை ஜபித்து அருளைப் பெறலாம்.
வெகுதூரம் மற்றும் நாடுகளில் வசிப்பவர்கள் தேய்பிறை அஷ்டமியன்று குளிகை காலம் அல்லது இராகு காலத்தில் 30 நிமிடங்களில் "ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ" என்று ஜபிக்கலாம். சனியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசியினர் இன்று முழுவதும் "ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ" என்று ஜபிக்கலாம்.
பைரவர் மந்திரம்
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹநோபம!
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி!!
என்று சொல்லி வணங்கலாம். மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வ வளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். எவ்வளவு கஷ்டங்கள் வீட்டில் இருந்தாலும் அவை ஒழிந்து சுபீட்சம் பெருகும் என்ற நம்பிக்கையும் உண்டு. பைரவருக்கு அத்தகைய சக்திகள் உண்டு. அது போல பைரவர் உடைய வாகனமாக இருக்கக்கூடிய நாய்களுக்கு உணவாக நாம் எதைக் கொடுத்தாலும் அது புண்ணியக் கணக்கில் சேரும்.