குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்..ஜன.31ல் தை கார்த்திகை தெப்ப உற்சவம் கோலாகலம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தை கார்த்திகையை முன்னிட்டு நடைபெறும் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை கார்த்திகையை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடைபெறும். தை கார்த்திகை சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார். 31ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் தெப்பத் திருவிழாவும் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் விழா இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
அன்றைய தினம் காலை திருவாட்சி மண்டபத்தில் விநாயகர், சீவிலி நாயக்கர் முன் ரிஷப யாகம் முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் கொடியேற்றப்பட்டு தர்ப்பை புல், மா இலை வைத்து பட்டு துணியால் சுற்றி மாலை அணிவிக்கப்பட்டது. கம்ப அடிப்பாகத்தில் திரவிய அபிஷேகங்கள் நடந்தன. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.
கொடியேற்றம் நாள் தொடங்கி தினமும் சுவாமி, தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், சேஷ வாகனம், தங்க மயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஜனவரி 30 ஆம் தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சுவாமி, தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜனவரி 31 ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.