திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி.. ஜன.2 முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு..டோக்கன் பெறுவது எப்படி?
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை நேற்று கூட்டம் நடந்தது. காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வரும் ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்றைய தினம் கோவில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது.
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி.. சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்
சொர்க்கவாசல் திறப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நீதிபதிகள், மத்திய மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும். அதனை தொடர்ந்து சாதாரண பக்தர்கள் வரிசையில் வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இதனிடையே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதில் முக்கியமானதாக ஜனவரி 2 ம் தேதி துவங்கி, ஜனவரி 11 ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக திருப்பதி கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வ தரிசனம்
சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்காக மட்டும் 5 லட்சம் தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50,000 டோக்கன்கள் என்ற அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதே போல் 2.5 லட்சத்திற்கும் அதிகமான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களும் ஒதுக்கப்பட உள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 25,000 டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வ தரிசனத்திற்கான டோக்கன்கள் திருப்பதியில் மட்டுமே பெற முடியும். இதனால் கூட்டத்தை முறையாக கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், தேவையற்ற கூட்ட நெரிசலையும் தவிர்க்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி சமயத்தில் திருப்பதிக்கு பக்தர்கள் வர எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதே சமயம் தரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஐபி பிரேக் தரிசனம்
சர்வ தரிசனத்திற்கான டோக்கன்களை ஜனவரி 1 ம் தேதி முதல், அதற்காக ஒதுக்கப்பட்ட கவுன்ட்டர்களில் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். 5 லட்சம் டோக்கன்கள் முடியும் வரை எல்லா சமயத்திலும் டோக்கன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமானிய பக்தர்கள் தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக சோதனை முயற்சியாக டிசம்பர் 1 ம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசன நேரம் காலை 5.30 மணிக்கு பதிலாக 7.30 மற்றும் 8 மணி என மாற்றப்பட்டுள்ளது.
சீனிவாசமங்காபுரம்
இதனிடையே திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு 17ஆம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16ஆம் தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் தொடங்குகிறது. அன்று மாலை முதலே கோவிலில் மார்கழி மாத கைங்கர்யம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து தினமும் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6 மணி வரை பக்தர்களுக்கு மார்கழி மாத தரிசனம் வழங்கப்படுகிறது. காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை நித்ய கல்யாண உற்சவம் நடக்கிறது. மார்கழி மாத வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை மார்கழி மாத கைங்கர்யம், மூலவர்களுக்கு அபிஷேகம், காலை 9.15 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி மாதம் 2ஆம் தேதி அதிகாலையில் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக இலவச தரிசன பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி அன்று கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடி நீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். வரிசையாக பக்தர்கள் செல்ல போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாதாரண பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது விஐபிகள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது. அவர்களை எந்தவொரு தொந்தரவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.