உறவும் துறவும்..பெரியவரும் பெருமாளும்..காஞ்சி மகா பெரியவரின் பெருமைகளை அறிந்து கொள்வோம்
மதுரை: ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் முதிர்ந்த பகுதியில் மனப்பக்குவம் அடைந்து துறவு மனம் பெற வேண்டும். இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாதிருக்க முதியவர்கள் துறவு மனநிலையை மேற்கொள்வதும், ஆன்மீகத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் உதவும் என்று ஆன்மீக பேச்சாளர் திருப்பூர் கிருஷ்ணன் கூறியுள்ளார். வாழ்க்கையில் மன அமைதியுடன் வாழ, துறவு மன நிலையே உதவும் எனவும் திருப்பூர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.
'மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம்' அமைப்பு சார்பில், எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம்.கே., கல்யாண மண்டபத்தில் 'மகா பெரியவா ஆராதனை' சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆன்மீக பேச்சாளரும் எழுத்தாளருமான இந்திரா சௌந்தரராஜன், பெரியவரும் பெருமாளும்' என்ற தலைப்பில் மகா பெரியவரின் பெருமைகளை எடுத்துக்கூறினார்.
"ஸ்ரீ மகா பெரியவர் விபூதியை அணிந்துகொண்டு அத்வைதியாக வாழ்ந்தவர். எந்த நிலையிலும் இறைவனின் பாதம் பற்றினால் நமக்கு எல்லாம் கிடைக்கும். நான் யார் என்று சிந்தித்தவர் பகவான் ரமணர். உலகில் நாம் யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஸ்ரீ மகா பெரியவர் அத்வைதியாக இருந்தாலும் அவர் விசிஷ்டா துவைதியாகவும் வாழ்ந்தவர். 100 வருடம் பூரணமாக வாழ்ந்தவர். அவரது சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தன.

புராணங்களில் தேவர்கள் அசுரர்கள் என்று இருந்தது போல மனிதர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள். 13 வயதில் சந்நியாசம் ஏற்று 88 வருடங்களுக்கு மேல் மக்களை சந்தித்து அரணை மறவேன், திருமாலை வணங்கு என்று சொன்னவர் ஸ்ரீ மகா பெரியவர். சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று சொன்னவர். இதைத்தான் 'ஹரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு' என்பார்கள். பெரியவர் தன் உபன்யாசத்தில் அதிகம் சிந்தித்தது முருகனையும் பிள்ளையாரையும்.
கும்பாபிஷேகத்தின்போது தெளிக்கிற நீர் 12 வருடம் நாம் செய்த கொலை பாதங்களை தீர்க்கிறது. ஸ்ரீ மகா பெரியவருக்கு உடல் நலம் இல்லாதபோது அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்ந்தவர். தர்மத்தோடு வாழ்ந்தால் நாம் வெற்றி கொள்ள முடியும் என்று கூறினார்.
அனுசத்தின் அனுக்கிரஹம் நிகழ்ச்சியில் பேசிய திருப்பூர் கிருஷ்ணன், 'உறவும் துறவும்' எனும் தலைப்பில் பேசினார். அப்போது அவர், துறவு நெறி, துறவிகளுக்கு மட்டுமானது அல்ல. இந்து மதத்தை பொறுத்தவரை துறவு நெறி எல்லோருக்குமானது. பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என ஒவ்வொருவர் வாழ்விலும் நான்கு நிலைகள் அமைகின்றன.
பிரம்மச்சாரியாக இருந்து, பின்னர் மண வாழ்க்கை மேற்கொண்டு குறிப்பிட்ட வயதிற்கு பின் அனைவருமே துறவு மனப்பான்மையோடு வாழ வேண்டும். துறவு வாழ்க்கைக்காக குகைக்கு போய் தவம் புரிய வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் அல்லது இருக்கும் இடத்திலிருந்து தவ வாழ்வில் ஈடுபட வேண்டும். புராணங்களில் அரசர்கள் வாரிசுகளுக்கு முடி சூட்டிய பின் கானகம் சென்று தவம் புரிந்ததாக படிக்கிறோம்.
குந்தி தேவி, காந்தாரி, திருதராஷ்டிரர் எல்லோரும் இறுதிக்காலங்களில் துறவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான். ஆதிசங்கரர், விவேகானந்தர், பரமாச்சாரியார் போல மணம் புரிந்து கொள்ளாத துறவியரும் உண்டு. அரவிந்தர், வள்ளலார் போல மணம் புரிந்து வாழ்வில் ஈடுபடாமல் துறவியானவரும் உண்டு.

ராகவேந்திரர், புத்தர் போல குழந்தை பெற்றுக் கொண்டபின் துறவியானவர்களும், பெண்களில் சாரதா தேவி, சக்கரையம்மா, ஆனந்தமயி, ஆண்டவன் பிச்சி போன்ற துறவிகளும் உண்டு.
ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் முதிர்ந்த பகுதியில் மனப்பக்குவம் அடைந்து துறவு மனம் பெற வேண்டும். இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாதிருக்க முதியவர்கள் துறவு மனநிலையை மேற்கொள்வதும், ஆன்மீகத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் உதவும்.
'மண வாழ்வில் குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் பிரம்மச்சரியம் அனுசரிக்க வேண்டும்' என மகாத்மா காந்தியின் கோட்பாடும் துறவை வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும் துறவு மனநிலை நோக்கி பயணப்பட்டு மன அமைதி பெறுவோம் என்று பேசினார். அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். காஞ்சி ஸ்ரீமகா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications