திருப்பதியில் டிசம்பர் மாதம் என்னென்ன விழாக்கள்..வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் அதிரடி மாற்றம்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. நாளை டிசம்பர் 1 முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திங்கட்கிழமை வரை காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதிக்கு வந்த செவ்வாய்கிழமை காலை வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாமல் வரிசையில் தரிசனத்திற்கு காத்திருந்தனர். பக்தர்கள் காத்திருக்கும் வைகுண்ட காம்ப்ளக்ஸ்கள் நிரம்பி வரிசையில் காத்திருக்கின்றனர்.
இலவச தரிசனத்துக்கு டோக்கன்கள் பெறாதவா்கள் 30 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 முதல் 4 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி கீதா ஜெயந்தி, 5ஆம் தேதி சக்கரத்தீர்த்த முக்கோடி உற்சவம், 7ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா, 8ஆம் தேதி திருப்பாணாழ்வார் வருட திருநட்சத்திரம், 16ஆம் தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் தொடக்கம், 19ஆம் தேதி சர்வ ஏகாதசி, 22ஆம் தேதி ஆத்யாயன உற்சவம் தொடக்கம், தொண்டரடிபொடியாழ்வார் வருட திருநட்சத்திரம் போன்ற விழாக்கள் நடைபெற உள்ளது.
கிளம்பிய நூதன மோசடி.. ஆதார் ஈபி லிங்க் பண்ணலயா? 'க்ளிக்’ பண்ணா காலி.. டிஜிபி சைலேந்திரபாபு வார்னிங்!
இதனிடையே நாளை டிசம்பர் 1 முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தினமும் பக்தர்கள் திருமலைக்கு வந்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் திருமலையில் உள்ள அறைகள் வாங்கும் நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.