"இனி இலவசம் இல்லை.." சத்தமின்றி கூடுதல் கட்டணத்தை வசூலிக்க தொடங்கிய கூகுள் பே.. யூசர்கள் அதிர்ச்சி
மும்பை: நம்மில் பலரும் இப்போது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தனை காலம் இந்த செயலிகளில் அனைத்து சேவைகளையும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்த சூழலில், அது இப்போது மெல்ல மாற தொடங்கியுள்ளது. கூகுள் பே நிறுவனம் இப்போது பிராசசிங் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த காலத்தில் நீங்கள் பர்ஸ் இல்லாமல் கூட வெளியே போகலாம். ஆனால், செல்போன் இல்லாமல் வெளியே செல்ல முடியாது. அந்தளவுக்கு உங்களுக்குத் தேவையான A டு Z வரை எல்லாமே செல்போனில் இருக்கிறது.

யுபிஐ
அதில் முக்கியமானது யுபிஐ.. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் இந்த யுபிஐ வருவதற்கு முன்பு வரை எந்தவொரு பொருளை வாங்குவதற்கும் கேஷ் தான் தர வேண்டும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இருந்தாலும் கூட அதன் பயன்பாடு ரொம்பவே குறைவாகவே இருக்கும். சின்ன சின்ன கடைகளில் கேஷ் தான் கிங்.
ஆனால், யுபிஐ வருகைக்குப் பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. யுபிஐ பயன்பாட்டிற்குக் கட்டணம் இல்லை என்பதால் சின்ன சின்ன கடைகளும் கூட யுபிஐ மூலம் பேமெண்டுகளை வாங்கத் தொடங்கினர். இதன் காரணமாகவே யுபிஐ பயன்பாடு கொஞ்சக் காலத்தில் மின்னல் வேகத்தில் அதிகரித்தன. யுபிஐ நிறுவனங்களும் மெல்ல தங்கள் சேவைகளை மொபைல் ரீசார்ஜ், இதர பில் கட்டணங்கள் என விரிவுபடுத்தின.
கூடுதல் கட்டணம்
இதுநாள் வரை ஜிபே செயலியில் குறைந்த மின்சார கட்டணம் மற்றும் கேஸ் புக்கிங் செய்ய எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே இப்போது கூகுள் நிறுவனம் இதற்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அதில் ஒரு சின்ன விஷயத்தை நாம் நோட் செய்ய வேண்டும். அதாவது நீங்கள் யுபிஐ மூலம் இதற்குக் கட்டணம் செலுத்தினால் இன்னும் இலவசம் தான். அதேநேரம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த பில்லில் 0.5% முதல் 1% கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது. இத்துடன் அதற்கான ஜிஎஸ்டி தொகையும் தனியாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போன்பே மற்றும் பேடிஎம் செயலிகளில் இதற்கான கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், இப்போது அதில் ஜிபே செயலியும் இணைந்துள்ளது.
எவ்வளவு கட்டணம்
சமீபத்தில் யூசர் ஒருவர் மின்சார பில்லை கட்டும் போது கூடுதல் கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்பட்டது. அதில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான பிராசசிங் கட்டணம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்தே ஜிபே இதுபோல தனியாகக் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தது. அதேநேரம் இது மொத்த தொகையைப் பொறுத்து மாறுபடும். எனவே, துல்லியமாக ஒரு பேமெண்டிற்கு எவ்வளவு என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
அதிகாரிகள் சொல்வது என்ன
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பில் பேமெண்ட்டுகளுக்கு பிளாட்ஃபார்ம் கட்டணங்களைக் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. நமது பேமெண்டுகளை பிராசஸ் செய்ய ஃபின்டெக் நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட செலவாகும். அதை இப்போது யூசர்களிடமே வசூலிக்கத் தொடங்கியுள்ளன. யுபிஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து வருவாயை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளன" என்றார்.
கூகுள் பே உள்ளிட்ட அனைத்து யுபிஐ நிறுவனங்களும் கடந்தாண்டு முதல் ரீசார்ஜ் செய்யத் தனியாகக் கட்டணங்களை வசூலித்து வருகிறது. இப்போது கேஸ், மின்சாரம் உள்ளிட்ட பில் பேமெண்டுகளும் இணைந்துள்ளன. வரும் நாட்களில் இதுபோல கூடுதல் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளில் யுபிஐ நிறுவனங்கள் தீவிரம் காட்டும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications