"நான் உயிரோடு தான் இருக்கிறேன்”- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த "பாட்டுக்கு பாட்டு“அப்துல் ஹமீது
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பி.எச் அப்துல் ஹமீது சமீபத்தில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அப்துல் ஹமீது மூன்று முறை இறந்துவிட்டார் என்று பல்வேறு தகவல்கள் பரவியதை தொடர்ந்து தற்போது அவை அனைத்தும் பொய் என்று நிரூபித்து இருக்கிறார்.
பல வருடங்களாக வெளியே தெரியாமல் இருந்த அப்துல் ஹமீதுவின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியங்களை பற்றி அவர் பகிர்ந்து இருக்கிறார்.

மறக்க முடியாத பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி
தொலைக்காட்சி அனைத்து வீடுகளிலும் இல்லாத காலகட்டத்தில் பக்கத்து வீட்டில் அல்லது தெருவின் மையப் பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே தொலைக்காட்சி இருக்கும் நிலையில் பார்த்து பார்த்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் அதனை கலந்து கொண்ட நடிகர்கள் தொகுப்பாளர்களை இப்ப வரைக்கும் மறந்துவிட முடியாது. அந்த மாதிரி தான் 80ஸ் மற்றும் 90ஸ் களின் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் கேட்டு ரசித்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. தன்னுடைய கனீர் என்ற குரலால் மிரள வைக்கும் தமிழ் உச்சரிப்பு, சரியான வசனம் என மக்கள் மனதை கவர்ந்தவர் பிஎச் அப்துல் ஹமீது. இவர் சமீப காலமாகவே எங்கே போனார் என தெரியாமல் தான் இருந்து வந்தது. இந்த நிலையில் இவரை பற்றி பல்வேறு வதந்திகளும் அடிக்கடி பரவி வந்தது. அவர் விபத்தில் இறந்து விட்டார் என்று மூன்று முறை அவரைப்பற்றி செய்திகள் சமூக பரவி இருந்தது. தற்போது அதை குறித்து அப்துல் ஹமீது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஏழ்மையான குடும்பம்
அப்துல் ஹமீது இலங்கையில் பிறந்தவர் தான். இவருடைய குடும்பம் சிறுவயதில் வறுமைக் கோட்டுக்கு கீழே தான் இருந்ததாம். தன்னுடைய தந்தையை இரண்டாம் உலகப்போரில் இழந்து, அவருடைய அம்மா ஹாசியா உம்மாவுடன் நான்கு பிள்ளைகளில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். பின்னர் இவருடைய அம்மாவும் இவர் தொகுப்பாளராக வேலை கிடைத்த போது இறந்து விட்டாராம். இவருடைய வீடு இருந்த பகுதியில் மின்சார வசதியே இல்லாத பகுதியாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் அங்கு ஆண்டுக்கு ஒரு முறை அந்தோனியார் திருவிழா நடைபெறுமாம். அப்போது அங்கு சிவாஜி கணேசனின் வசனங்கள் ஒளிபரப்பு செய்யப்படுமாம்.

சிவாஜி கணேசனின் வசனத்தின் ரசிகர்
திருவிழா நேரத்தில் கேட்கப்படும் சிவாஜி கணேசனின் வசனங்களை கேட்டு தான் இவர் பேசும் திறமை வளர்ந்தது என்று கூறியிருக்கிறார். சிவாஜி கணேசன் கருப்பா, சிவப்பா, கட்டையா, குட்டையா? என்று தெரியாவிட்டாலும் அவருடைய குரலை வைத்தே இவர் ஒரு உருவத்தை வடிவமைத்துக்கொண்டு பழகி இருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வருவதற்கு முன்பே அந்த நாடகங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆக நடித்து அதிலிருந்து தான் அப்துல் ஹமீதின் வாழ்க்கை தொடங்கியதாம்.

முதல் வதந்தி
அதற்குப் பிறகு 1983 ஆம் ஆண்டு இனக் கலவரம் ஏற்பட்டபோது அங்கிருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் அவர்களுக்கு தெரிந்த பெயரை குறிப்பிட்டு அவருக்கு ஒன்றும் இல்லையே என்று கேள்வி கேட்டார்களாம். அப்போது அப்துல் ஹமீதின் பெயரும் அடிபட்ட போது யாரோ ஒருவர், அவரும் அவரது மனைவியும் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிலர் தடுத்து காரில் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தி விட்டார்கள் என்று தகவலை சொல்லி விட்டார்களாம். அந்த நேரத்தில் தமிழ் மொழியில் இலங்கையில் பேச முடியாது என்ற காரணத்தினால் இவரும் வானிலை நிலையம் சென்று எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். அந்த நேரத்தில் இவர் இறந்துவிட்டார் என்று செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவி இருந்ததாம்.

இரண்டாவது வதந்தி
அதுமட்டுமல்லாமல் அதற்குப் பிறகு ஒரு நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. ஒருமுறை அப்துல் ஹமீது உடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் இறந்து விட்டாராம். அது அப்துல் ஹமீதை அதிகமாக பாதித்ததால் இவர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இதனை ஒருவர் ஆதாரமாக வைத்து ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. அந்த செய்திக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மரணம், கதறி அழுதது குடும்பம் என்று இவருடைய புகைப்படமும் வந்திருந்ததாம். அப்போது அப்துல் ஹமீதும் சரி பரவாயில்லை என்னால் அவருக்கு சிறிய வருமானம் கிடைத்தது என்று அதை குறித்து எதுவும் தெரிவிக்காமல் விட்டுவிட்டாராம்.

மூன்றாவது வதந்தி
மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அப்துல் ஹமீது உடன் வானொலியில் வேலை செய்த ஒரு பெண்ணின் கணவர் பெயரும் ஹமித் தானாம் அந்த பெண் தன்னை விசாலாட்சி ஹமீது என்றுதான் வானிலையில் கூறுவாராம். அவருடைய கணவர் தென்னிந்தியாவிற்கு வந்தபோது இறந்துவிட்டாராம். அப்போது அவரின் இறப்பு செய்தி வானொலியில் விசாலாட்சியின் அன்பு கணவர் விசாலாட்சி ஹமீது தென்னிந்தியாவில் காலமானார் என்று ஒளிபரப்பானதாம். ஏற்கனவே ஹமீது தென்னிந்தியாவிற்கு பலமுறை வந்து சென்று கொண்டிருப்பதால் இவர்தான் இறந்து விட்டார் என்று இவருடைய மனைவிக்கு தொலைபேசியில் பலர் வருத்தம் தெரிவிக்க அழைப்பு விடுத்திருந்தார்களாம்.

மீண்டும் குரல் ஒலிக்க வேண்டும்
இப்படி நான் மூன்று முறை இறந்து விட்டதாக செய்திகள் பரவிக் கொண்டிருந்தாலும் நான் இப்போதும் உயிரோடுதான் இருக்கிறேன் என்று பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து இவர் மீண்டும் பழைய நிலையில் புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் பல வருடங்களுக்கு பிறகு இவரை பார்த்தாலும் இவர் அப்போ இருந்த மாதிரியே அப்படியே இருக்கிறார். இவருடைய கணீர் குரல் மீண்டும் ஒலிக்க எப்போது தொடங்கும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications