கழுத்து நிறைய 300 சவரன் போட்டும்.. நள்ளிரவில் கதறிய திருப்பூர் ரிதன்யா.. அழுக்கை எதிர்த்து போராடணும்
சென்னை: இந்த சமூகம் அழுக்கு படிந்த சமூகம்.. இப்படிப்பட்ட சமூகத்தை எதிர்த்து போராட பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பயந்துபோய் தற்கொலை செய்தால், அதனால் வரும் இழப்பு சமூகத்துக்கு கிடையாது, அவரவர் குடும்பத்துக்குதான்.. அழுக்குகளை எதிர்த்து போராட கற்றுக் கொள்ளாவிட்டால், பல ரிதன்யாக்களை நாம் இழக்க நேரிடும் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், ரிதன்யா விவகாரம் குறித்து கூறியிருக்கிறார்.
ரிதன்யா விவகாரத்தின் பரபரப்பு அடங்கவில்லை. தங்கள் மகளுக்கு நீதி கிடைக்குமா என்று பெண்ணின் குடும்பத்தினர் ஏங்கி காத்திருக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் இவ்வளவு அவதிப்பட்டு உயிரிழந்த ஒரு பெண்ணுக்கு, இதுதான் நீதியா? என்று ரிதன்யாவின் சகோதரர் அழுது கொண்டே கேட்கிறார்.

நெஞ்சு எரியுதடி
ரிதன்யாவின் போட்டோவை வைத்துக் கொண்டு, ரிதன்யாவின் தாய் கதறி அழுது கொண்டிருக்கிறார்.. "நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்.. உன் அப்பா என்னடி பண்ணுவாரு.. நெஞ்சு எரியுதடி' என்று கண்ணீர் விட்டு அழுகிறார்.
செய்தியாளர்களிடம் அவர் சொல்லும்போது, "பையன் ஓரளவு வளர்ந்துவிட்டால், வெளியே விட்டு பழகணும்.. வீட்டிலேயே பொத்தி பொத்தி வளர்த்தால்,இப்படித்தான் சைக்கோவா மாறி நிற்கும்.. கண்ட கண்ட வீடியோவை பார்த்துட்டு, பொண்டாட்டி மேல டெஸ்ட் செய்தால் பொம்பளை தாங்குவாளா?
பொம்பளையா? பொம்மையா? இதையெல்லாம் சொன்னால், அவ அப்பா அத்தனை பேரையும் போட்டுத்தள்ளிவிட்டு, இந்நேரம் உள்ளே இருந்திருப்பாரு. அதுக்கு பயந்துட்டுதான் எதையுமே சொல்லாம போயிட்டாள்" என்றெல்லாம் கண்ணீர் விட்டு சொல்கிறார்.
கோடிகளில் ஒற்றுமை
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், 300 பவுன் நகை, 85 லட்சத்துக்கு கார், இரண்டரை கோடி திருமண செலவு, 10 கோடி சீதனம் என கோடிகளில் கோடிகளில் இந்த திருமணம் நடந்துள்ளது. ஆனால், 2 மனங்களுக்குமான ஒற்றுமையில் இந்த திருமணம் நடக்கவில்லை..
ரிதன்யா தன்னுடைய தந்தையிடம் சென்று, கணவருடன் வாழ முடியாது, பாலியல் வக்கிரம் பிடித்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், என்று அழுது புகார் சொல்லி உள்ளார்.. அப்படியானால், ரிதன்யாவை தன்னுடைய மனைவியாக கணவன் பார்க்கவில்லை.. பாலியல் விலைமாதுகளுடன் தொடர்புடையதால், தன்னுடைய மனைவியையும் அதுபோலவே பார்த்துள்ளார்.
மனநல ஆலோசகர்
இத்தனை கோடிகளை கொடுத்து திருமணம் செய்த மகளின் தந்தை, மகள் சொன்ன புகார்களையெல்லாம் ஒரு தனியார் துப்பறி நிறுவனத்திடம், மருமகன் குறித்து விசாரிக்க சொல்லியிருக்கலாம். வெறும் 50 ஆயிரத்தில் எல்லா உண்மைகளையும் அவர்களும் சொல்லியிருப்பார்கள். அல்லது ஒரு மனநல ஆலோசகரிடமாக அழைத்து சென்றிருக்கலாம். அப்போது பெற்றோரிடம் சொல்ல முடியாத விஷயத்தைகூட, மனநல மருத்துவரிடம் ரிதன்யா நிச்சயம் சொல்லியிருப்பார்.
இந்த மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள 78 நாட்கள் தேவையில்லை. வெறும் 7 நாள் போதும்.. இப்போது பல ஆண்-பெண், திருமணத்துக்கு முன்பே சந்தித்து பழகி, ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், ரிதன்யா அப்படி செய்யவில்லை. தன்னுடைய அப்பா தனக்காக எது செய்தாலும் சரி என்று விட்டுவிட்டார்..
அப்பாவி பெண் ரிதன்யா
வாட்ஸ் அப் மெசேஜை சந்தேகப்பட முடியாது. காரணம், ரிதன்யா ஒரு மனநோயாளி கிடையாது. ஒழுக்கம் தவறியவரும் கிடையாது.. அந்த பெண்ணின் மீது எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது.. கணவனை போலவே தானும் தவறானவராக இருந்திருந்தால் அந்த பெண் இன்று உயிருடன் இருந்திருப்பாள்.. கணவனை எப்படி கையாள்வது என்று தெரிந்திருக்கும்..
ஆனால், ஒரு பெண் மரணம் வரை செல்கிறார் என்றால், தவறு கணவன் தரப்பில்தான்.. அந்த பெண் ஒரு அப்பாவி. அதனால்தான், இந்த மனநோயாளியை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.
இது அழுக்கான சமுதாயம்
இன்று அன்பு, பண்பைவிட, பொருளாதாரம்தான் இந்த சமூகத்தை தீர்மானிக்கிறது. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்யாமல், ஆயிரம் கோடிக்கும், ஆயிரம் கோடிக்கும், திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இந்த சமூகம் அழுக்கு படிந்த சமூகம்.. இப்படிப்பட்ட சமூகத்தை எதிர்த்து போராட பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பயந்துபோய் தற்கொலை செய்தால், அதனால் வரும் இழப்பு சமூகத்துக்கு கிடையாது, அவரவர் குடும்பத்துக்குதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. சமூக அழுக்கை எதிர்த்து போராட கற்றுக் கொள்ளாவிட்டால், பல ரிதன்யாக்களை நாம் இழக்க நேரிடும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications