கொரோனா ஒருபக்கம்..பன்றிக்காய்ச்சலும் மறுபக்கம் பரவுது..கேரளாவில் பலியான 12 வயது சிறுமி
கேரளாவில் பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் பலியானார். மற்றொரு சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் 12 வயதுச் சிறுமி ஒருவர் பன்றிக்காய்ச்சலால் இறந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே பன்றிக்காய்ச்சலும் பரவி வருவது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வரும் இரட்டை சகோதரிகள் விடுமுறையைக் கழிக்க அண்டை மாநிலம் சென்றுள்ளனர். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் காய்ச்சலால் பாதிக்கப்படவே, உள்ளேரிக்கு அருகில் உள்ள கொய்லாண்டி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதலில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இன்னொரு சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் ரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதில் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் H1N1 வைரஸ் தொற்றானது, பொதுவாக பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகளோடு தோன்றும் இந்தத் தொற்று பன்றியிலிருந்து மனிதனுக்குப் பரவுகிறது.
கேரளாவில் கடந்த சில வருடங்களாக H1N1 வைரஸ் தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு பன்றிக்காய்ச்சல் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் சுகாதார அதிகாரிகள். இந்நிலையில் சிறுமியின் திடீர் உயிரிழப்பு கேரள மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுப்புது வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி பலியானது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications