பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படம்.. கேரளா காங்கிரஸில் பிரளயம்.. ஏகே ஆண்டனியின் மகன் திடீர் ராஜினாமா!
பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2002ல் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. இதுபற்றி பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் பிபிசியின் ஆவணப்பட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், மாஜி கேரளா முதல்வருமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளை இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்பு குஜராத் முதல் அமைச்சராக இருந்தார். இவர் முதல்வராக இருந்த 2002 காலக்கட்டத்தில் குஜராத்தில் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது.
இந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனம் 2 பகுதிகளாக ஆவணப்படங்களை தயாரித்துள்ளது. இதில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத் பல்கலையில் சர்ச்சை.. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு! பாயும் நடவடிக்கை!
ஆவணப்படத்துக்கு தடை
‛‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்" என்ற தலைப்பில் வெளியான முதல் பாகம் வெளியாகி உள்ளது. பல்வேறு வலைதளங்களில் இந்த ஆவணப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரிட்டனிலும் கடும் எதிர்ப்பை இது சம்பாதித்தது. இந்தியாவும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. அதோடு மத்திய அரசு சார்பில் அந்த ஆவண படத்துக்கு தடை விதித்துள்ளது. இதற்கிடையே ட்விட்டர், யூடியூப்பில் உள்ள ஆவணப்படங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏகே ஆண்டனியின் மகன்
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க எதிர்க்கட்சியினர் மோடி தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை தடையை மீறி திரையிட்டு வருகின்றன. கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் தரப்பில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் முன்னாள் மத்திய அமைச்சரும், மாஜி கேரளா முதல்வருமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்து இருந்தார்.
அனில் ஆண்டோனி சொன்னது என்ன?
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், அகில இந்திய அளவில் சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக அனில் ஆண்டோனி கருத்து தெரிவித்து இருந்தார். இது பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இருந்தது. இதுபற்றி அவர் ‛‛பாஜகவுடன் அதிக கருத்து வேறுபாடுகள் எனக்கு உள்ளன. இருப்பினும் இந்திய நிர்வாக அமைப்புகள் பற்றி நீண்ட காலமாகவே தவறான எண்ணம் கொண்ட பிபிசியின் கருத்தை ஆதரிப்பது என்பது நாட்டின் இறையாண்மையின் மதிப்பை சீர்குலைக்க செய்வது போல் இருக்கும்'' என தெரிவித்து இருந்தார். இதன்மூலம் பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸில் இருந்து ராஜினாமா
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலுத்தன. இருப்பினும் அனில் அந்தோனி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அனில் அந்தோணி அறிவித்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை அவர் கட்சி தலைவருக்கு அனுப்பி உள்ளார். மேலும் அந்த கடிதத்தை அனில் அந்தோணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‛‛அகில இந்திய காங்கிரஸ் மற்றும் கேரளா காங்கிரஸ் கட்சியில் எனது பொறுப்புகளில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறன். சகிப்புத்தன்மையற்ற பேச்சு என்பது சுதந்திரத்துக்கு எதிரானது. ட்வீட்டை திரும்ப பெற கூறியதை நான் மறுத்துவிட்டேன்'' என விளக்கமாக தெரிவித்துள்ளார்.