நரமாமிச கும்பல்.. கேரளாவில் நரபலி தந்து சடலத்தை சாப்பிட்ட கொடூரன்.. குற்றவாளி சிபிஎம் உறுப்பினரா?
திருவனந்தபுரம்: கேரளாவில் பண தேவை மற்றும் நீண்ட ஆயுளுக்காக 2 பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்று சொல்லப்பட்ட நிலையில், சிபிஎம் தரப்பு இதை மறுத்துள்ளது.
கேரளாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், கட்சி உறுப்பினரே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனம் குறித்து கட்சி தரப்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை
கேரளாவின் திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங் நீண்ட காலமாக பண பிரச்னையை எதிர்கொண்டு வந்திருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். இவ்வாறு இருக்கையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண யோசித்துக்கொண்டிருக்கையில் முகமது ஷபி எனும் சாமியாரின் தொடர்பு கிடைத்துள்ளது. அவரிடம் சென்றால் தனது கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்று பலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நிர்வாணமாக
இவ்வாறு இருக்கையில், பகவல்சிங்கும் சாமியாரை அணுகியுள்ளார். இந்த நெருக்கடிக்கு நரபலி ஒன்றுதான் தீர்வு என்று அவர் கூறியுள்ளார். நரபலிக்கு தேவையான பெண்களை தான் அழைத்து வருவதாக கூறி அதற்கான பணத்தை சாமியார் சபி பெற்றுக்கொண்டு வாக்கு கொடுத்தவாறே இரண்டு பெண்களை அழைத்து வந்துள்ளார். பின்னர் இரண்டு பெண்களையும் ஆடைகளின்றி கட்டிப்போட்டு விட்டு, இருவரின் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளார்.

விசாரணை
பின்னர் அவர்களின் உடல்களை 60 துண்டுகளாக வெட்டி அதனை சாமியார் ஷபி, மருத்துவர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் அங்கே சாப்பிட்டிருக்கிறார்கள். மீதமான உடல் துண்டுகளை பகவல்சிங் வீட்டு தோட்டத்தில் புதைத்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே தெரிய வரவே காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்துகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சாமியாரான ஷபி போலி சாமியார் என்பது தெரிய வந்துள்ளது.

போலி சாமியார்
பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது, கஞ்சா கடத்தல், 75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது என பல்வேறு வழக்குகள் ஷபி மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் இதில் முக்கிய குற்றவாளியான ஆயுர்வேத மருத்துவர் பகவல்சிங், கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் என்றும் கட்சியிலிருந்து பணியாற்றி வந்திருந்தார் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இது குறித்து பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்.

விளக்கம்
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா பகுதி குழு செயலாளர் பி.ஆர்.பிரதீப் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "பகவல்சிங் சில காலம் எங்களுடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது அவர் முற்போக்காக இருந்தார். ஆனால் கட்சி உறுப்பினராக இல்லை. பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் மதவாதியாக மாறிவிட்டார்" என்று கூறியுள்ளார்.
முற்போக்கு செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கேரள மாநிலத்தில் நரபலி கொடுத்து, அந்த பிரேதத்தை உண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications