சபரிமலை போராட்டம்.. கேரள முதல்வர் பினராயி வீடு முற்றுகை.. போலீசார் குவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்ற சென்னையைச் சேர்ந்த 11 பெண்களால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. அதேநேரம் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் முன்பு வலதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கேரளாவில் வெடித்தது போராட்டம். தொடர்ந்து, பல்வேறு வடிவங்களில் போராட்டம் உருவெடுத்து வருகிறது.
சபரிமலையை அயோத்தியைப் போல் ஆவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதனால், மோதல் முற்றியது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முடக்கினர். இந்தநிலையில் சென்னையில் இருந்து வந்த பெண்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
6-வது முறையாக தடை
சபரிமலை கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் போலீசாரின் கெடுபிடியால் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை 6 வது முறையாக நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனைவரும் சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருநங்கைகள் தரிசனம்
இதற்கிடையே, கடந்த வாரம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் தந்திரிகள் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தாரிடம் போலீசார் நடத்திய ஆலோசனைக்கு பிறகு கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சு ஆகிய 4 திருநங்கைகள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், பெண்களை அனுமதிக்க கூடாது என பந்தளம் மன்னர் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
வலதுசாரி கட்சியினர் போராட்டம்
பெண்கள் உரிமை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பெண்களுடன் ஒரு குழுவாக (ஞாயிற்றுக் கிழமை) 23-ம் தேதி சபரிமலைக்கு தரிசனம் செய்ய வர உள்ளதாக சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற பெண்கள் அமைப்பு கடிதம் எழுதி இருந்தது. அதற்கு, பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீசார் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயனிடம் இருந்து தகவல் வந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், சபரிமலை நோக்கி பெண்கள் வந்துள்ளதால், கொந்தளிப்புக்கு உள்ளான வலதுசாரி கட்சியினர் முதல்வர் பினராயி விஜயன் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வீச்சு
சென்னையில் இருந்து சபரிமலை சென்றுள்ள செல்வி பேசுகையில்: நாங்கள் சபரிமலை செல்வதற்கு வழி விடுங்கள் என்றும், விரைவில் திரும்பி விடுவதாகவும் கூறினர். ஆனால், சூழல் சரியில்லாததால் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண்களை போலீசார் சபரிமலை நோக்கி அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆண் பக்தர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.