கொரோனா அச்சுறுத்தல்: மக்களே அலார்ட்! அடுத்த 30 நாட்களுக்கு "கேரளாவில் முககவசம் கட்டாயம்" அரசு அதிரடி
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கேரளாவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், பணியிடங்கள், மக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும் என்றும் அடுத்த 30 நாட்களுக்கு இவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது.
மக்களுக்கு பெரும் நிம்மதி பெருமூச்சை இதை கொடுத்து வந்தது. ஆனால், கடந்த 2019- ஆம் ஆண்டு எப்படி முதன் முதலாக கொரோனாவை பரப்பி உலக நாடுகளை நிலைய குலைய வைத்த சீனாவில் மீண்டும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கியது.

சீனாவில் அதிகமாகும் பாதிப்பு
அந்த நாட்டில் கண்டறியப்பட்ட ஒமிக்ரானின் பிஎப் 7 வகை கொரோனா காட்டுத்தீ போல சீனாவில் பரவியது. சீனாவில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்களும் போராடியதால் வேறு வழியின்றி கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டது. இதனால் கொரோனா உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சீனாவில் தனது வேலையை காட்டியது. தினமும் பல லட்சம் பேருக்கு பாதிப்பையும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் கொரோனா ஏற்படுத்தியதாக தகவல் பரவியது.

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்
ஆனால், இதையெல்லாம் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கு உலக நாடுகள் பலவும் அதிருப்தி தெரிவித்தது. உலக சுகாதார அமைப்பும் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க சீனாவில் பரவிய கொரோனா திரிபுகள் அண்டை நாடுகளுக்கும் பரவியது. இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள்
இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ்கள் பரவுகிறதா என்பதை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கும் தொற்று பாதித்தவர்களின் மாதிரிகளை அனுப்ப சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் எனவும் இந்தியா கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்தியாவில் 26 ஆக உயர்வு
தற்போது அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவில் XBB.1.5 ச்வகை கொரோனா பரவலால் அங்கு தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இந்த எக்ஸ்பிபி 1.5 வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, மகராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக தினசரி பாதிப்பு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் 114- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் 2,119- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு பெரிய அளவில் உயராவிட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால் புதிகா பரவும் வேரியண்ட்கள் மீண்டும் தொற்று பரவலுக்கு வழி வகுக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கும் தகவலாக இருக்கிறது.

கேரளாவில் முக கவசம் கட்டாயம்
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கேரளாவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், பணியிடங்கள் , மக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடைகள் மற்றும் தியேட்டர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சனிடைசர்கள் பயன்படுத்திய பிறகே மக்களை அனுமதிக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் அடுத்த 30 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் இந்தக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications