17 பேர்.. ரூ.23 லட்சம்.. உலககோப்பை கால்பந்து போட்டியை பார்த்தே ஆகணும்.. சேட்டன்கள் செய்த ‛சம்பவம்’
திருவனந்தபுரம்: கத்தாரில் இன்று இரவு உலககோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளது. இந்நிலையில் தான் கேரளாவில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உலககோப்பை கால்பந்து போட்டியை காண வேண்டும் என்பதற்காக 17 பேர் ரூ.23 லட்சம் செலவில் வீடு ஒன்றை வாங்கிய சம்பவம் இந்தியாவிலும் கால்பந்து காய்ச்சல் பரவியதை காட்டி உள்ளது.
உலகில் அதிக ரசிகர்கள் இருக்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது. இந்நிலையில் தான் அனைவரும் எதிர்பார்த்த 22வது உலககோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று இரவு பிரமாண்டமாகவும், கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடனும் தொடங்க உள்ளது.
இந்த போட்டிகள் டிசம்பர் 18 வரை ஏறக்குறைய ஒரு மாதம் வரை நடைபெற உள்ளது. உலககோப்பை போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த நாடுகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
தொடக்க போட்டியில் கத்தார்
இந்திய நேரப்படி இன்று இரவு உலககோப்பை கால்பந்து போட்டியின் முதல் போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் அணி, ஈகுவடார் அணியை எதிர்கொள்ள உள்ளது. அதைத்தொடர்ந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால் உலகம் முழுவதும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தாரில் குவிந்து வருகின்றனர்.
இந்தியாவில் கால்பந்து ஜூரம்
இந்நிலையில் தான் கால்பந்து ஜூரம் இந்தியாவுக்குள் பரவி உள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள ரசிகர்களும் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் தான் உலககோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக சேர்ந்து பார்க்க கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் செய்த சம்பவம் தான் தற்போது இந்தியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் என்ன செய்தனர்? என கேட்கிறீர்களா? அதற்கான பதில் அறியலாம் வாங்க..
கேரளா கால்பந்து ரசிகர்
கேரளா மாநிலம் கொச்சி மாவட்டம் முண்டக்காமுகல் எனும் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் என மொத்தம் 17 பேர் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து கால்பந்து அணியை உருவாக்கி உள்ளனர். மேலும் கிளப் தொடர்பான கால்பந்து போட்டிகளை ஒன்றுவிடாமல் அவர்கள் பார்த்து ரசிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கால்பந்து காய்ச்சல்
இந்நிலையில் தான் தற்போதைய உலககோப்பை கால்பந்து போட்டியை எந்த இடையூறும் இன்றி பார்த்து ரசிக்க அவர்கள் முடிவு செய்தனர். வீட்டில் இருந்தால் குடும்பத்தினர் இடையூறு செய்யலாம் என நினைத்த அவர்கள் மாற்று வழியில் யோசித்தனர். அதன்படி தற்போது அவர்கள் கிராமத்தில் தனியாக வீடு ஒன்றை வாங்க முடிவு செய்தனர்.
ரூ.23 லட்சத்துக்கு வீடு
அதன்படி அவர்கள் 17 பேரும் மொத்தம் ரூ.23 லட்சத்தை சேர்த்தனர். இதையடுத்து அவர்கள் கிராமத்தில் தனியாக வீடு ஒன்றை வாங்கி உள்ளனர். நிலம் மட்டும் வீடு ஆகியற்றுக்காக ரூ.23 லட்சத்தை செலவழித்தனர். இந்த வீட்டுக்கு பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் நாடுகளின் கொடிகளை போல் வண்ணம் அடித்துள்ளனர். மேலும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி, போர்ச்சுக்கல் அணியின் ஸ்டார் பிளேயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட மேலும் சில வீரர்களின் பெரிய கட்அவுட்டுகளை வைத்துள்ளனர்.
வீடு வாங்கியது ஏன்?
இதுபற்றி ஷபீர் கூறுகையில், ‛‛2022 பிபா உலககோப்பை கால்பந்து போட்டியியை மனதுக்கு நெருக்கமானதாகவும், மறக்க முடியாத வகையிலும் மாற்ற முடிவு செய்தோம். இந்நிலையில் தான் கிராமத்தில் உள்ள வீட்டை விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்தார். அப்போது தான் இந்த வீட்டை வாங்கி ஏன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க கூடாது? என்ற கேள்வி எழுந்தது. மேலும் நாங்கள் சிறுவயது முதலே இந்த இடத்தில் அனைவரும் சேர்ந்து இருந்தோம். இதனால் வீட்டை வாங்க முடிவு செய்தோம்.
மகிழ்ச்சியாக இருக்கிறது
இதையடுத்து 17 பேர் சேர்ந்து ரூ.23 லட்சம் செலவு செய்து வீடு வாங்கினோம். நாங்கள் அனைவரும் வீட்டில் பெரிய டிவி முன்பு அமர்ந்து ஒன்றாக கால்பந்து போட்டியை ரசிக்க உள்ளோம். இந்த வீட்டை தற்போது நாங்கள் பயன்படுத்தும் நிலையில் சிறிது காலத்துக்கு பிறகு எங்களின் அடுத்த ஜெனரேஷனை சேர்ந்தவர்கள் இந்த வீட்டை பயன்படுத்துவார்கள். இது மகிழ்ச்சி'' என்றார்.
ரசிகர்கள் யாருக்கு அதிகம்?
இதுபற்றி ஹரீஷ் என்பவர் கூறுகையில், ‛‛இந்த வீடு, நிலம் விற்பனை செய்யப்படுவதை அறிந்து ரூ.23 லட்சத்துக்கு வாங்கினோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுடன் அனைத்து வயதினரும் உள்ளனர். நாங்கள் 17 பேர் உள்ள நிலையில் பெரும்பாலானவர்களுக்கு அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல், பிரான்ஸ் அணிகள் மனம் கவர்ந்ததாக உள்ளன. எங்கள் கிராமத்தை பொருத்தவரை அதிகமானவர்கள் அர்ஜென்டிான மற்றும் பிரேசில் அணியின் ரசிகர்களாக உள்ளனர்'' என்றார்.