தமிழகத்தை ஓவர்டேக் செய்த கேரளா.. மின்னல் வேக கொரோனா பாரவலுக்கு ஓமிக்ரான் காரணமா?
திருவனந்தபுரம் : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகம் படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி முழு ஊரடங்கு மற்றும் இரவு நேரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான கேரளாவிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கேரளா மாநிலத்தில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
தொடர்ந்து தமிழகத்தில் எகிறும் கொரோனா.. இன்று மட்டும் 29,870 பேருக்கு பாதிப்பு.. 33 பேர் பலி
தமிழகத்தில் பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இன்றும் மட்டும் மேலும் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,72,666 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இன்றும் பாதிப்பு குறைந்து இன்று 7038 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பாதிப்பு
கேரளா மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கலை அம்மாநில சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. அந்த அறிக்கையின் படி கேரளா மாநிலத்தில் இன்று மட்டும் 41 ஆயிரத்து 668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பாதிப்பு பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயிரிழப்புகளும் அதிகரிப்பு
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இன்று 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா காரணமாக உயிரிழப்பு கணக்கில் சேர்க்கப்படாத 73 பேரது உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின்படி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால்கேரள மாநிலத்தில் இதுவரை கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 51,607ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் பாதிப்பு?
அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 17 ஆயிரத்து 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் கேரளாவில் குணமடைந்து எண்ணிக்கை 52 லட்சத்து 76 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவின் உருமாற்ற வைரஸான ஓமிக்ரான் பரவல் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதும் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என கூறும் மருத்துவ நிபுணர்கள் ஓமிக்ரான் குறித்தும் அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளனர்.