கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணிவரை 61% வாக்குகள் பதிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் 5 மாவட்டங்களில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணிவரை 61% வாக்குகள் பதிவாகி இருந்தன.
கேரளாவில் இன்று முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை 3 கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
88,26,260 வாக்காளர்கள்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 88,26,260 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இவர்களில் 46,68, 209 பேர் பெண் வாக்காளர்கள்; 70 பேர் 3-ம் பாலினத்தவர். முதல் கட்ட தேர்தலுக்காக 11,225 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்ட தேர்தல்
இன்றைய வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2-ம் கட்டமாக டிசம்பர் 10-ந் தேதியன்று கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3-வது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறும்.
கேரளாவில் மும்முனை போட்டி
3 கட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 34,710 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் ஆளும் இடது முன்னணி அரசு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பகலில் 50% வாக்கு பதிவு
ஆளும் இடதுமுன்னணி அரசு மீதான தங்க கடத்தல் வழக்கு இந்த தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று பிற்பகல் 3 மணிவரை முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 61% வாக்குகள் பதிவாகி இருந்தன.