என்னாகும்.. ஹைதராபாத் தேர்தல் போலவே.. கேரளாவிலும் மாஸ் காட்டுமா பாஜக.. எகிறும் எதிர்பார்ப்பு!
கேரளா உள்ளாட்சி தேர்தலில் பாஜக மாஸ் காட்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: ஹைதராபாத் போலவே, கேரளாவிலும் பாஜக கெத்து காட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இன்றைய உள்ளாட்சி தேர்தல் முடிவுகளே அதை நிர்ணயிக்கும் என்றும் தெரிகிறது.
இன்று உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் வெளிவர உள்ளது.. கடந்த 8-ம் தேதி 14 மாவட்டங்களின் 3 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தன. இடது முன்னணி - காங்கிரஸ் - பாஜக என மும்முனை போட்டி அங்கு ஏற்பட்டது.
இதில், கேரளாவில் ஆளும் இடதுமுன்னணி கடுமையான குச்சாட்டுகளில் சிக்கி இருக்கிறது. இது நிச்சயம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
கேரள உள்ளாட்சி தேர்தல்: இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!
ஹைதராபாத்
அப்படியானால், ஹைதராபாத் தேர்தலை போலவே, இங்கும் பாஜக சாதிக்குமா? கால் பதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கு ஆட்சியை பிடித்தாலும் தென் மாநிலங்களில் மட்டும் ஆட்சியை பிடிப்பது பாஜகவுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.. இதில் கேரளாவும், தமிழ்நாடும்தான் பாஜகவுக்கு பெரிய தலைவலியே.
பாஜக
இதற்கு காரணம், இந்த 2 மாநில மக்களும் மதரீதியிலான அரசியலை மையமாக வைத்து வாக்களித்தது கிடையாது.. இனியும் அப்படி செய்ய மாட்டார்கள்.. அதனால் தென் மாநிலங்களை பொறுத்தவரை, கர்நாடகாவை தவிர ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, புதுச்சேரி என எந்த மாநிலங்களிலும் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் ஆதரவும், வலுவும் இல்லை.
ஹைதராபாத்
ஆனாலும், பாஜக தலைமை விடுவதாக இல்லை.. பீகார் தேர்தல் முடிந்த பிறகு இவர்களின் கவனம் தென்மாவட்டங்களில்தான் குவிந்து வருகிறது.. அதன் ஒரு பகுதியைதான் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காண முடிந்தது.. பிரதமர் மட்டும்தான் வரவில்லை, மற்றபடி மொத்த பாஜக தலைவர்களும் ஹைதராபாத் பிரச்சாரத்துக்கு திரண்டு வந்ததையும், அப்போது மத ரீதியான விஷயங்களை தூவி சென்றதையும் மறுக்க முடியாது.. அதன் விளைவு, 2வது இடத்துக்கு தாவி வந்து மாஸ் காட்டியது பாஜக!
பிரச்சாரம்
அதுபோலவே, கேரளாவின் இன்றைய தேர்தலிலும் பாஜக ஏதாவது வெற்றி முத்திரையை பதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. ஆனால், கேரள உள்ளட்சி தேர்தலை பொறுத்தவரை 2 விஷயங்களை சொல்லி ஆக வேண்டும்.. இங்கு நடந்த பிரச்சாரங்களில் பாஜக முக்கிய தலைவர்கள் அவ்வளவாக பங்கேற்கவில்லை.. இவர்கள் மட்டுமில்லை, காங்கிரஸ், இடதுசாரிகளின் டெல்லி தலைவர்களே இந்த பிரசாரத்துக்கு வரவில்லை. பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் மட்டுமே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
முத்தலாக்
மற்றொரு விஷயம், உள்ளாட்சி தேர்தலில், முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் ஏராளமான வேட்பாளர்களாக பாஜக நிறுத்தி உள்ளதுதான் இந்த தேர்தலின் பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது.. 600க்கும் மேற்பட்ட சிறுபான்மையினரை களத்தில் இறக்கி விட்டுள்ளது பாஜக.. அதாவது ஹைதரபாத் தேர்தலுக்கு நேர் எதிரான யுக்தியை கேரளாவில் கையில் எடுத்துள்ளது பாஜக.. காரணம், முத்தலாக் சட்டம், பெண்கள் திருமண வயது உயர்த்துவது ஆகியவை இஸ்லாமிய பெண்களிடம் பாஜகவுக்கு பெரும் ஆதரவை பெற்று தந்துள்ளதாக நம்புகின்றனர் அந்த கட்சியின் தலைவர்கள்.
இந்துத்துவா கொள்கை
எனவே, தீவிரமான இந்துத்துவா கொள்கையை வலியுறுத்தாமல் உள்ளாட்சித் தேர்தலை பாஜக எதிர்கொண்டிருப்பதால், கேரளாவில் பாஜக சாத்தியமாகுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதைதவிர, ஆளும் இடது முன்னணி மீதான அதிருப்திகளும், சர்ச்சைகளும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.. காரணம், பினராயி விஜயனே உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், இவையெல்லாம் பாஜகவுக்கு சாதகமாகக்கூடும் என்றும், ஹைதராபாத் போலவே கேரளா மண்ணிலும் பாஜக கெத்து காட்ட நிறைய சான்ஸ்கள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.