ரியல் "சதுரங்க வேட்டை".. ஓஹோனு வாழ்ந்த கோடீஸ்வரன்.. இப்போ சாமியார்.. கதையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க!
திருவனந்தபுரம்: கேரளாவில் செல்போன் கடையில் வேலையை தொடங்கி விரைவில் கோடீஸ்வரனாகி பின்னர் தன்னிடம் வேலைப்பார்த்தவர்களுக்கே ஊதியம் கொடுக்காமல் சாமியாராக மாறு வேடத்தில் தமிழ்நாட்டில் சுற்றித்திரிந்த நபரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வருவதைப்போலவே இவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருக்கிறது. கேரளாவின் திருச்சூர் பகுதியில் லக்வீத் காலனியில் வசித்து வந்தவர்தான் பிரவீன் ராணா. இவரது தந்தை செல்போன் கடையை வைத்து நடத்தி வந்திருக்கிறார். தன்னுடைய மகனும் தன்னை போலவே சுயமாக நிற்க வேண்டும் என்பதற்காக பிரவீனுக்கும் செல்போன் கடையை வைத்து கொடுத்திருக்கிறார் இவரது தந்தை.
ஆனால் பிரவீன் செல்போன் விற்ற காசை வீட்டிற்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பெரிய அளவு தொகை சேர்ந்தவுடன் வீட்டிற்கு தெரியாமல் பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார். இங்கு ஒரு பக்கம் தனது மகனை காணவில்லை என்று வீட்டில் இவரது தாய் புலம்ப ஒரு வாரம் கழித்து தான் பெங்களூருவில் இருப்பதை பிரவீன் குடும்பத்திற்கு தெரிவித்திருக்கிறார். இவர் பெங்களூருவுக்கு வந்ததற்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் இருந்திருக்கிறது.
'வேலை நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது'.. ஆவடி கமிஷனர் வார்னிங்!
புதிய வாழ்க்கை
பெங்களூரு சென்ற பிரவின் அங்கு நெருக்கடி காரணமாக இழுத்து மூடப்பட்ட பார்களின் விவரங்களை சேகரித்துள்ளார். இதில் எந்த பார் குறைந்த விலையில் கிடைக்கிறதோ அந்த பாரை வாடகைக்கு எடுத்திருக்கிறார். பார் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக ஓட தொடங்கியுள்ளது. இதில் போட்ட முதலீடு கிடைத்தவுடன் அடுத்த நகர்வுக்கு திட்டமிட்டுள்ளார் பிரவீன். பார் நடத்தும் இடத்திலேயே பப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். பப்பை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு பெரிய அளவுக்கு முதலீடு தேவை. இந்த அவுக்கு பிரவீனிடம் பொருளாதாரம் இல்லை. எனவே தனது நண்பர்களிடம் இந்த ஐடியாவை கூறியுள்ளார்.
பப்
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சில முதலீட்டாளர்களிடம் இவர் இந்த ஐடியாவை கூற அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். திட்டமிட்டபடி முதல் பப் திறக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட இதில் அதிக லாபம் சீக்கிரமாகவே வரத் தொடங்கியுள்ளது. ஆனால் பிரவீன் இத்துடன் நிற்கவில்லை. பெங்களூருவில் இது போன்று நெருக்கடியாக உள்ள பார்கள் ஒவ்வொன்றாக வாடகைக்கு எடுக்க தொடங்கினார். அதில் பப் உருவாக்கப்பட்டது. அதிக அளவில் முதலீட்டாளர்கள் குவிந்துள்ளனர். இவர்களுக்கு லாபமும் விரைவாக கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வர்த்தகத்திற்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை என்பது இன்றியமையாதது.
நம்பிக்கை
இந்த நுணுக்கத்தை புரிந்துக்கொண்ட பிரவீன் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை எவ்வளவு விரைவாக கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கொடுக்க முயன்றிருக்கிறார். அதேபோலவே லாபமும் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த பிஸினஸ் பெங்களூருவிலிருந்து மற்ற நகரங்களுக்கு பரவியது. பின்னர் தமிழ்நாடு, கோவா உள்ளிட்ட இடங்களும் இந்த பிஸினஸை விரிவுப்படுத்தியுள்ளார். எதிர்பார்த்ததைப் போலவே கோடிக்கணக்கில் லாபம் கிடைத்திருக்கிறது. வணிகத்தில் எழுதப்படாத ஒரு விதி இருக்கிறது. அதாவது லாபம் அதிகம் கிடைக்குமெனில் மூலதனம் தன்னையே கூட அழித்துக்கொள்ள தயங்காது என்பதுதான் அது.
நிதி நிறுவனம்
அந்த வகையில் இவர் 2010ம் ஆண்டு பார், பப் வணிகத்திலிருந்து விலகி நிதி நிறுவனத்தை உருவாக்கினார். அதற்கு முன்னர் பல டிவி ஷோக்களில் பேச்சாளராக பங்கேற்று பேசினார். இவரை பேட்டியெடுக்க பல சேனல்கள் காத்திருந்தன. இந்த பிரபலத்தையடுத்து அரபு நாடுகளிலிருந்து இவர் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டார். இந்த திட்டமும் வெற்றியடைந்தது. முதல் கட்டமாக கேரளாவில் நான்கு மாவட்டங்கிளல் இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் திறக்கப்பட்டன. கேரளாவுக்கு வெளியேயும் 20 கிளைகள் திறக்கப்பட்டன. இதற்கிடையில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டமும் கொடுக்கப்பட்டது.
திரைப்பட மோகம்
இதிலெல்லாம் வெற்றியடைந்தும் அவருக்கு ஒரேயொரு குறை மட்டும் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதாவது, தன்னுடைய முகம் பொதுவெளியில் பிரபலமாகவில்லை என்பதுதான். இதனையடுத்து சினிமாக பக்கம் பிரவீனின் கவனம் திரும்பியது. எனவே திரைப்படம் எடுப்பதில் அதிக அளவில் முதலீடு செய்தார். முதலில் 'ஆனன்' எனும் திரைப்படத்தை 2020ம் ஆண்டு தயாரித்தார். இந்த திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இறுதியில் இத்திரைப்படம் வெளியாகவில்லை. ஆனால் இவர் முயற்சியை கைவிடவில்லை. எனவே மீண்டும் 2022ம் ஆண்டு 'சோரன்' எனும் திரைப்படத்தை தயாரித்து நடித்தார்.
திருமணம்
இந்த திரைப்படம் தயாரித்துக்கொண்டிருக்கும்போதே இவர் கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி சுமார் ரூ.4 கோடி செலவு செய்து திருமணம் செய்துகொண்டார். இது திரைப்படத்தை கடுமையாக பாதித்தது. சரியான நேரத்தில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. எனவே திட்டமிட்ட நாட்களுக்குள் படம் முடிக்கப்படவில்லை. நாட்கள் நீட்டிக்கப்பட்டதால் செலவு கூடுதல் ஆனது. கடைசியில் ஒருவழியாக படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதை வெளியிடுவதற்கு பணம் இல்லை. மற்றொருபுறம் நிதி நிறுவனமும் நெருக்கடியால் தள்ளாடியது. ஊழியர்களுக்கான சம்பளம் கொடுப்பதில் பிரச்னை எழுந்தது.
நெருக்கடி
கடந்த நவம்பரில் இந்த பிரச்னை பெரியதாக வெடித்த நிலையில் பாதி ஊழியர்கள் பணியை விட்டு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டும் கொடுக்கப்பட்டது. முதலீட்டாளர்களின் லாபம் முற்றிலுமாக நின்றுபோனது. ஆனால் இது குறித்து பிரவீன் விளக்கமளிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இவ்வாறு இருக்கும் நிலையில், காவல்துறையில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரவீன் காவல்துறை முன்னிலையில் முதலீட்டாளர்களுக்கு விளக்கமளித்தார். இதன் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார்.
கோவை
அவர் எங்கு போனார் என்ன ஆனார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. காவல்துறையில் முதலீட்டாளர்கள் மீண்டும் புகார் அளித்தனர். அதேபோல பிரவீன் வீட்டிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் 5 நாட்களுக்கு பின்னர் கோவையில் பிரவீனை கைது செய்தனர். தன்னை யாரும் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக இவர் சாமியாராக மாறுவேடம் போட்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் பதுங்கி இருந்துள்ளார். தமிழ்நாட்டில் இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. கேரளாவில் பரபரப்பாக செய்தி வந்தபோதும் தமிழ்நாட்டில் இவர் குறித்து எந்த செய்தியும் வெளியாகிவில்லை. எனவே கோவையில் இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. தற்போது கேரள காவல்துறையினர் இவரை விசாரணை செய்து வருகின்றனர்.