பிறந்த 28 நாளில் இறந்த குழந்தை.. துக்கத்தில் மகனை கிணற்றில் தள்ளி..உயிரை விட்ட வங்கி மேலாளர்
பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை இறந்த துக்கத்தில் மகனை கிணற்றில் தள்ளி கொன்று வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கியில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை இறந்த துக்கத்தில் மகனை கிணற்றில் தள்ளி கொன்று வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உப்புத்துறையை சேர்ந்த டோம் என்பவர் அப்பகுதியில் ஒரு நகை கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லிஜா (வயது 38). இவர், தொடுபுழாவில் உள்ள கூட்டுறவு வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு பென் (7) என்ற மகன் உள்ளார். பென் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் லிஜா 2-வது கர்ப்பமாக இருந்தார். கடந்த 28 நாட்களுக்கு முன்பு உப்புத்துறையில் உள்ள அவரது தாய் வீட்டில் வைத்து பெண் குழந்தை பிறந்தது. கடந்த 14-ந் தேதி லிஜா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த லிஜா குழந்தையை தூக்கி கொண்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

சோகத்தில் லிஜா
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்ததாக கூறினர். மேலும் தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதைக்கேட்டதும் லிஜா மிகவும் கதறி அழுதார். குழந்தை இறந்த துக்கத்தில் வேலைக்கு செல்லாமல் லிஜா வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார்.

உறவினர்கள் தேடினர்
இந்நிலையில் வியாழக்கிழமை குழந்தைக்கு இறுதி சடங்கு செய்வதற்காக வீட்டில் இருந்து உறவினர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். லிஜா மற்றும் அவரது மகன் மட்டும் இருந்தனர். பின்னர் வெளியே சென்ற அனைவரும் வீட்டிற்கு வந்தபோது 2 பேரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் தேடி அலைந்தனர்.

உடல்கள் மிதந்தன
உறவினர்கள் நீண்ட நேரம் தேடிக்கொண்டிருந்த நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள 40 அடி ஆழ கிணற்றில் லிஜா, அவரது மகன் பென் ஆகிய 2 பேரும் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே உறவினர்கள் உப்பத்துறை போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மனவேதனை
பின்னர் வீரர்கள் கிணற்றில் இறங்கி 2 பேரின் உடல்களையும் மீட்டனர். இதையடுத்து போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்புத்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், குழந்தை இறந்ததால் லிஜா மனவேதனையில் இருந்து வந்திருக்கிறார்.

தற்கொலை செய்தார்
இதனால் துக்கம் தாங்காமல் நேற்று முன்தினம் தனது மகனை அழைத்து கொண்டு வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றுக்கு போயிருக்கிறார். அங்கு வைத்து நெஞ்சை கல்லாக்கி கொண்டு தனது மகனை கிணற்றில் தள்ளி கொன்றுள்ளார். பின்னர் லிஜா தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை இறந்த துக்கத்தில், மகனை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
(எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் அரசின் உதவி எண் ஆன 104ஐ தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். அதேபோல் iCALL (Hours: Mon-Sat, 10 AM-8 PM. Languages: English, Hindi, Marathi, Gujarati, Bengali, Tamil)க்கு 9152987821 என்ற எண்ணில் அழைத்து நிவாரணம் பெறலாம்.)












Click it and Unblock the Notifications