கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் ஷைலஜாவுக்கு மக்சேசே விருது.. ஏற்க மறுத்து பதில் கடிதம்.. காரணம் என்ன?
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகாசேசே விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த விருதை ஏற்க மறுத்து அவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2-வது முறையாக அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
முந்தைய ஆட்சி காலத்தில் அதாவது கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான பினராயி விஜயனின் ஆட்சி காலத்தின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் கேகே ஷைலஜா.

மிகச்சிறப்பாக பணியாற்றியதற்காக
கொரோனா காலத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றியதற்காக நாடு முழுவதும் ஷைலஜா அறியப்பட்டார். ஏனெனில் இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளாவில் தான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவை பற்றி பெரிதும் அறிந்து இருக்காத அந்த சமயத்தில் சிறப்பாக கையாண்டு தொற்று பரவல் கேரளாவில் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது. இதில் ஷைலஜாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டார்.

ஆசியாவின் நோபல் பரிசு
ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் பினராயி விஜயன் ஆட்சி அமைத்தாலும் அவருக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டது. ஷைலாஜாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது சற்று விமர்சனங்களையும் எழுப்பியது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக கே கே ஷைலாஜாவுக்கு ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ரமோன் மக்சேசே விருது வழங்கி கவுரவிக்க விருது வழங்கும் குழு முடிவு செய்தது.

விருதை பெற மறுப்பு
இதற்காக ஷலஜாவுக்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த விருதை பெற கேகே ஷைலஜா மறுத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து கேகே ஷைலஜா கூறுகையில், ''ரமோன் மக்சேசே விருது வழங்கும் குழுவில் இருந்து எனக்கு கடிதம் வந்தது. சிபிஐஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்பதால் கட்சியுடன் இது குறித்து ஆலோசித்தேன். இந்த ஆலோசனைக்குப் பிறகு விருதை ஏற்க வேண்டாம் என்று ஒருங்கிணைந்து முடிவு செய்துவிட்டோம்.

பதில் கடிதம் அனுப்பிவிட்டேன்
இந்த விருது தனிநபருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக என்னால் இந்த விருதை பெற முடியது. மேலும் கொரோனா காலத்தில் கூட்டு முயற்சியாலே சிறப்பாக செயல்பட முடிந்தது. எனவே ஒரு தனிநபராக இந்த விருதை பெறமுடியாது என பதில் கடிதம் அனுப்பிவிட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ரமோன் மக்சேசே
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது தான் ரமோன் மக்சேசே விருது. ஆரம்பத்தில் 6 பிரிவுகளில் தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட இந்த விருது கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒரே பிரிவில் வழங்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் இந்த விருதை இந்தியாவில் இதுவரை வினோபாபாவே, அன்னை தெரசா, ஜெயபிரகாஷ் நாராயண் உள்பட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications