மக்களைக் காப்பாற்றிய திட்டம் இது.. ஆனால் மோடி ஒப்புக்கொள்ளவில்லை.. ராகுல் காந்தி விமர்சனம்!
திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியபோது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்திற்கு வயநாட்டிற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். இன்று விவசாயிகளுக்காக கட்டப்பட்ட வங்கி கட்டடத்தை திறந்து வைத்தபின் 100 நாள் வேலை திட்டம் குறித்து பேசினார்.
அண்மையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊடங்கின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அதுவரை இல்லாத அதன் அதிகபட்ச தொகையாக ரூ.1.11 லட்சம் கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. சுமார் 11 கோடி தொழிலாளர்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ஒரு முக்கியமான உயிர்நாடியாக விளங்கியது. இதன்மூலம் ஊரடங்கின் போது மக்கள் மத்தியில் பணப்புழக்கம் ஏற்பட்டது.

100 நாள் வேலை திட்டம்
இந்தத் திட்டம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கடந்த 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தோல்வியின் நினைவுச்சின்னம் என்று நாடாளுமன்றத்தில் விமர்சித்தார். பிரதமர் இந்த மிகப் பெரிய வேலைவாய்ப்புத் திட்டத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதேபோல லட்சக்கணக்கான மக்களுக்கான வேலைவாய்ப்பினை இந்தத் திட்டம் அதிகரித்துள்ளது என்பதையும் உணரவில்லை.

மோடி மீது விமர்சனம்
இந்தியாவின் பொருளாதார நிலை, பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தினை அவசரகதியாக அறிமுகப்படுத்தியதால் மிகவும் மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.கொரோனா பரவலின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்பை இழந்தனர். அவர்களுக்கு இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. கொரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் குறித்து எதுவும் பேசவில்லை. அதேபோல இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்து இனிவரும் காலங்களிலும் அவர் நிச்சயம் பேசப்போவதில்லை.

மக்கள் நலன் மட்டுமே நோக்கம்
காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த திட்டத்தினை கொண்டுவர முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக பல தடைகள் வந்தன. காங்கிரஸின் இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படப் போகிறது என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் நாட்டினை கட்டமைப்பதும், மக்களின் நலனைக் காப்பது மட்டும் தான் என்று தெரிவித்தார்.

ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் தங்களுக்கு வழங்கும் வேலை நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது இந்த வேண்டுகோளை ஏற்று வேலை நாட்களை அரசு அதிகரிக்க வேண்டும். அதேபோல அவர்களது தினசரி ஊதியத்தை ரூ.400 ஆக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications