மேடை பாடகரை உறவினர்களை வைத்து கடத்திய மனைவி?.. நெல்லையில் பரபரப்பு.. போலீஸ் விரட்டிப் பிடித்தது!
நெல்லை: நெல்லையில் காரில் கடத்தப்பட்ட மேடை பாடகரை போலீஸார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மீட்டனர். இந்த விவகாரத்தில் மனைவியின் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் முத்துப்பாண்டி (31). இவர் மேடைகளில் பாடி வருகிறார். இவருக்கும் பாளையம்கோட்டையைச் சேர்ந்த குத்தாலிங்கத்தின் மகள் வேலம்மாளுக்கும் (30) கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பெண் வீட்டார் சார்பில் இருவரையும் சேர்த்து வைக்க எத்தனையோ சமரச பேச்சுக்கள் நடந்தன. ஆனால் சேர்ந்து வாழ்வதற்கு முத்துப்பாண்டி சம்மதிக்கவில்லை.
சித்தப்பா மகன் மீது மோகம்.. விபரீத காதல்.. விளைவு பறிபோனது ஒரு உயிர்!
சந்தித்து பேச்சு
இந்நிலையில் பாளையங்கோட்டையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நேற்று முத்துப்பாண்டி இசைக் கச்சேரி நடத்தினார். கச்சேரி முடிந்ததும் வெளியே வந்த முத்துப்பாண்டியை வேலம்மாளின் உறவினர்கள் சிலர் சந்தித்து பேசினர்.
கடும் தாக்குதல்
அப்போதும் முத்துப்பாண்டி முரண்டு பிடித்தார். இதையடுத்து 4 பேர் சேர்ந்து முத்துப்பாண்டியை காரில் கடத்தி பல்வேறு இடங்களுக்கு சுற்றினர். அப்போது தச்சநல்லூர் புறவழிச்சாலையில் காரை நிறுத்திவிட்டு 4 பேரும் சேர்ந்து முத்துப்பாண்டியை கடுமையாக தாக்கினர்.
அறைக்கு
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டனர். அவர்கள் இந்த தாக்குதலை கண்டனர். அதற்குள் அந்த கும்பல் முத்துப்பாண்டியை காருக்குள் தூக்கி போட்டு கொண்டு வேகமாக சென்றது. போலீஸாரும் அந்த காரை பின்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
அலுவலக சாலை
இதையடுத்து வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சக்கரவர்த்தி உள்ளிட்ட குழுவினர் அந்த காரை கண்டனர். அவர்களும் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். மாலை 6 மணிக்கு அந்த கார் கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலக ரோடு வழியாக சென்றது.
தப்பியோடியவர்களை
அப்போது போலீஸார் அந்த காரை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அந்த கும்பல் ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள சுற்றுச்சுவரில் காரை மோதிவிட்டு தப்பிஓடினர். முத்துப்பாண்டியை மீட்ட போலீஸார் தப்பியோடியவர்களை துரத்தி கொண்டு சென்றனர்.
இருவர் கைது
இதில் 2 பேர் மட்டும் அங்குள்ள பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப்போது வந்த டவுன் பஸ்ஸில் ஏறியபோது போலீஸார் பஸ்ஸை நிறுத்தி அவர்களை பிடித்தனர். விசாரணையில் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த உடையார் (39), சிங்கிகுளத்தை சேர்ந்த அய்யப்பன் (42) என்பது தெரியவந்தது.
மருத்துவமனையில் அனுமதி
இவர்கள் முத்துப்பாண்டி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழாததால் கடத்திச்சென்று தாக்கியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து தப்பியோடிய மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். முத்துப்பாண்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.