சென்னையில் இனி வெயில் கொளுத்தும்.. 100 டிகிரிக்கு மேல் பதிவாகும் வெப்பம்! COMK அப்டேட்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் இருந்தாலும், உள் மாவட்டங்களை போல தீவிரமாக இல்லை. இருப்பினும் இனி வரும் நாட்களில் சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என்று தனியார் வானிலை ஆய்வு மையம் (COMK) எச்சரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் 3 வாரங்கள் முடிவடைந்த நிலையில், தென்னிந்தியா கோடையின் பிடியில் சிக்கியுள்ளது. வழக்கத்திற்கு மாறான வெப்பம் இல்லை என்றாலும், மழை இல்லாத வறண்ட சூழல் மக்களிடையே ஒருவித அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, கிழக்கு கடற்கரை பகுதிகளில் வீசும் கிழக்கு திசை காற்றினால், வெப்பம் ஓரளவுக்குக் கட்டுக்குள் உள்ளது. ஆனால் ரொம்ப நாட்களுக்கு இதே நிலைமை நீடிக்காது.
மழை நிலவரம்
தென்னிந்தியாவில் பெய்ய வேண்டிய 'மாம்பழ மழை' முற்றிலுமாக நின்றுவிட்டது. குறிப்பாக, மார்ச் 1 முதல் கணக்கிடுகையில், கேரளாவில் மழைப்பொழிவு -36% குறைவாக உள்ளது. மாதத்தின் தொடக்கத்தில் வெப்பமண்டல அலைகளின் வருகையால் மாற்றம் ஏற்படலாம். ஆனால், அது தாமதமானால் கோடையின் தாக்கம் மேலும் தீவிரமடையும் என COMK வெளியிட்டிருக்கும் அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீர் இருப்பு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் காவிரி வடிநிலப் பகுதியில் நீர் இருப்பு 36 TMC குறைவாக உள்ளது. மேட்டூர் அணையில் மட்டும் கடந்த ஆண்டை விட 30 TMC நீர் குறைவாக உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த ஆண்டு பருவமழை குறித்த சித்திரம் சற்று கவலை அளிப்பதாக உள்ளது. இது டெல்டா மாவட்டங்களில் 'குறுவை சாகுபடி'யைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் வெப்பநிலை
உள் மாவட்டங்கள்: ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகள் தொடர்ந்து வெப்பமாக இருக்கும்.
தமிழகம்: மேற்கு, தெற்கு மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 39°C முதல் 40°C வரை பதிவாகக்கூடும்.
சென்னை புறநகர்: சென்னையில் நகர் பகுதியில் வெப்பம் மிதமாக இருந்தாலும், புறநகர் பகுதிகளில் 37°C முதல் 38°C (100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக) வரை வெப்பம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications