வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு.. 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
டெல்லி: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழையை விட இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூடுதலாக 31 சதவிகிதம் தமிழகத்தில் மழை பெய்யும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. வானிலை மையம் கூறியபடியே மழை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் கூடுதலாகவே மழை பெய்துள்ளது.

டிசம்பர் மாதம் தொடங்கிய ஆரம்பத்தில் சென்னையில் மழை கொட்டியது. தொடந்து விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும், பின்னர் டெல்டா மாவட்டங்களிலும் அடுத்ததாக தென் மாவட்டங்களிளும் மழை வெளுத்து எடுத்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்திருந்தது. ஃபெஞ்சல் புயல் மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக இந்த மழை பெய்தது.
இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால் இன்று உருவாவதில் தாமதம் ஆகியதாக மீண்டும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
'வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாளை 17 மற்றும் 18 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் கூறுகையில், “நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று 18 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications