பிசுபிசுத்த வடகிழக்கு பருவமழை.. இயல்பை விட குறைவாம்! வானிலை ஆய்வு மையம் சொன்னதை கவனிச்சீங்களா!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆனால் இது இயல்பை விட 15% குறைவு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் தவிர அனைத்து அணைகளும் ஏறத்தாழ நிரம்பியுள்ளன. மேலும் குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

எனவே அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை 24 செ.மீ பெய்திருக்கிறது. இக்காலகட்டத்தில் இயல்பு அளவு 31 செ.மீ. என இயல்பை விட 15% குறைவாக பருவமழை பெய்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இருப்பினும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் தமிழ்நாடு இயல்பு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்று மழையை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 24ம் தேதியை பொறுத்த அளவில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதே வரும் 25 மற்றும் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் சென்னையிலிலும் இயல்பை விட 30% குறைவாக மழை பெய்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications