"அடுத்த 9 நாட்கள்.." சென்னையில் அடுத்து மழை எப்போது? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்! நோட் பண்ணுங்க
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து சென்னைக்கு எப்போது மழை இருக்கும் என்பதைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் கடந்த வாரம் தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது.. பெரும்பாலான இடங்களில் மீட்புப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், மீத இடங்களிலும் நீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

இப்போது மீட்பு மற்றும் நிவாரண பகுதிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 6000 ரொக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன்: இதற்கிடையே அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலையில், அதனால் சென்னைக்கு மழை என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இப்போது தான் மிக்ஜாம் புயலில் இருந்தே சென்னை மக்கள் வெளியே வந்துள்ள நிலையில், மீண்டும் மழை என்பது அவர்களை அச்சத்தில் ஆழ்த்துவதாக இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.
அடுத்த 9 நாட்கள்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை இருக்கும், இதைத் தவிர அடுத்த 9 நாட்களுக்கு நாட்களுக்குத் தெளிவான வானிலை இருக்கும். இந்த காலகட்டத்தில் நிவாரணப் பணிகள் தடையின்றி தொடரலாம் சென்னை உட்பட அண்டை மாவட்டங்களில் அடுத்த மழை டிசம்பர் 19/ 20 தேதிகளில் பெய்யலாம். வரும் டிசம்பர் 15ஆம் தேதி தான் தெளிவாக மழை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு ட்வீட்டில், "இந்த முறை வடகிழக்கு பருவமழை நீடிக்கப்போவது உறுதி.. குறிப்பாகத் தென்தமிழக பகுதிகளில் அதிகளவில் மழை இருக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சென்னையில் அடுத்த ஒன்றரை வாரம் மழை இருக்காது என்பதை உறுதியாகியுள்ளது. அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றாலும் கூட இதனால் தென் தமிழகத்திற்குத் தான் மழை இருக்குமோ தவிரச் சென்னை உட்பட அண்டை மாவட்டங்களில் பாதிப்பு இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச.10) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (டிச.11) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.12 முதல் டிச.14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.15 மற்றும் டிச.16 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications