ஒடிசாவில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது! பாரசூட்டில் குதித்த பைலட்டுகள் தப்பினர்
புவனேஸ்வர்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்திற்குட்பட்ட குதார்ஷாய் என்ற இடத்தில் உள்ள நெல் வயலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் லேசான காயம் அடைந்தனர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் டிரெய்னர் போர் விமானம் இன்று தனது வழக்கமான பயிற்சி பணிக்காக காலைகுண்டா விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பியது. இந்த விமானம் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் சுமார் 50 கிமீட்டர் தொலைவில் அங்குள்ள வயல்வெளி ஒன்றில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்குள் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாரசூட் மூலம் குதித்து தப்பினர். விமானத்தில் இருந்து குதித்து தப்பிய விமானிகள் இருவரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். விமானிகள் இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள்னார்.
இந்த விமானம் விபத்துக்குள்ளனதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து உரிய விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.