ஜெயலலிதாவுக்கு தொண்டர்களிடமிருந்து பரிசுகள் வந்ததா? நீதிபதி கேள்வி
பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு சொந்தமான வெள்ளி பொருட்களுக்கு அதிகப்படியான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 11வது நாளாக நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் முதலில் வழக்கறிஞர் குமார் ஆஜராகினார். பிறகு டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வரவழைக்கப்பட்டு, ஜெயலலிதா சார்பில் ஆஜராகிவருகிறார். நாகேஸ்வரராவ், இன்று 6வது நாளாக வாதம் செய்தார்.
என் மனுதாரர், வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 1250 கிலோ வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்தார். அதை வருமானத்திற்கு உட்பட்டே வாங்கியிருந்தார். இந்த வெள்ளி பொருட்களுக்காக வருமானவரித் துறையில் தாக்கல் செய்து வரியும் கட்டியுள்ளார். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை இதன் மதிப்பை அதிகரித்துக் காண்பித்துள்ளது என்றார்.
இதனிடையே நீதிபதி குமாரசாமி, "எம்.ஜி.ஆருக்கு வழங்கியதுபோல் ஜெயலலிதாவிற்கு தொண்டர்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார்களா?" என கேள்விகேட்டார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல், கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா ,பிறந்த நாளுக்கு பின்னர் எந்த பரிசு பொருளும் வரவில்லை என்றார்.