மும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கைதான் ரஜினி நடிக்கும் 'காலா' .. இயக்குநர் ரஞ்சித்
மும்பையில் செட்டிலான நெல்லை மக்களிந் வாழ்க்கை குறித்து விளக்குவதுதான் காலா கரிகாலன் என்ற படத்தின் கரு பொருளாகும் என்று இயக்குநர் ரஞ்சித் தெரிவித்தார்.
சென்னை: நடிகர் ரஜினி காந்தின் 164-ஆவது படமான காலா கரிகாலன் என்ற திரைப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித் கருத்து தெரிவித்தார்.
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 2.0 படம் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோடம்பாக்கத்தில் ரசிகர்கள் சந்தித்த ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது என்று தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்தின் 164-ஆவது படத்துக்கான பெயரை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இன்று வெளியிட்டது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 3 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.
எங்கு படப்பிடிப்பு?
இதன் படப்பிடிப்பு வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. படப்பிடிப்பு குழுவினர் மும்பை சென்றுவிட்டனர். பெரும்பாலான படப்பிடிப்பு தாராவியில் நடைபெறுகிறது. இந்த படத்தை கபாலி படம் இயக்கிய ரஞ்சித்தே இயக்குகிறார். நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
பர்ஸ்ட் லுக்
இதற்கான பர்ஸ்லுக் போஸ்டரும் இன்று வெளியானது. இதுகுறித்து இயக்குநர் ரஞ்சித் தெரிவிக்கையில், ரஜினியின் படத்தை மீண்டும் இயக்குவதில் மிக்க மகிழ்ச்சி. என் மீது அவருக்கு உள்ள நம்பிக்கையே இந்த வாய்ப்புக்கான காரணம்.
கரிகாலன் யார்?
கரிகாலன் என்பதன் சுருக்கமான பெயரே காலா. பொதுவாக நாம் பெயர்களை சுருக்கியே அழைப்போம். அதுபோல்தான் இதுவும். கரிகாலன் என்பவர் எனக்கு பிடித்த அரசர். நீதியும், நேர்மையும் கொண்ட தமிழ் அரசராவார்.
மும்பையில்...
நெல்லை பகுதியில் உள்ள சிறு தெய்வத்தின் பெயரும் காலா ஆகும். இந்த பெயர் ரஜினி காந்துக்கு மிகவும் பிடித்தமான பெயராகும். நெல்லையிலிருந்து மும்பையில் செட்டிலான குடும்பத்தின் வாழ்க்கை குறித்த கதைதான் இதன் கருப்பொருள். இதில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் விவரங்கள் நாளை வெளியிடப்படும் என்றார் அவர்.
ஹீரோயின் யார்?
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனே இந்த படத்துக்கும் இசையமைக்கிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.