கறார் கன்டிஷன் போடும் விஜயகாந்த்.. அலட்டல் தாங்காமல் கழற்றிவிட அறிவாலயம் முடிவு?
சென்னை: விஜயகாந்த் ரொம்பவே கெத்து காட்டுவதால், அவரை கூட்டணிக்கு அழைக்கும் யோசனையில் இருந்து திமுகவின் சில தலைவர்கள் பின்வாங்குவதாக தெரிகிறது.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிப்பதில், தேமுதிக இன்னும் இழுபறி நிலையில் உள்ளது. அக்கட்சி நம்முடன் வருமா என மக்கள் நல கூட்டணியும், பாஜகவும் மட்டுமின்றி, திமுகவும் வழிமீது விழி வைத்து காத்துள்ளது.
திமுகவுடன் இணைவதுதான் வாக்கு வங்கியை பெருக்க உதவும் என்ற கருத்து தேமுதிகவின் தொண்டர்கள் 60 சதவீதம் பேருக்கு இருப்பதாக சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு கூறியது.
கருணாநிதியை கேர் செய்வதில்லை
அதேநேரம், விஜயகாந்த்தோ, திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது அனுபவத்தையும் மதிப்பதாக தெரியவில்லை என்பது திமுக தரப்பு முக்கியஸ்தர்கள் சிலரின் அங்கலாய்ப்பாக உள்ளது.
வறுக்கும் பிரேமலதா
கூட்டணிக்கான கதவை திறந்து வைத்துள்ள அதேநேரத்தில், விஜயகாந்த்தின் மனைவி, பிரேமலதாவோ, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும், பொதுக்கூட்டங்களில் வறுத்து வருவதும், திமுகவினருக்கு எரிச்சலை தந்துள்ளது.
த்தூ விவகாரத்தில் நழுவல்
பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வழக்கு போடக்கூடாது என்று ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ் செய்யும் கருணாநிதியே, பத்திரிகையாளர்களை பார்த்து விஜயகாந்த் துப்பியதற்கு கருத்து சொல்லாமல் நழுவிய காட்சியை, அவதூறு வழக்கு நடைபெற்ற கோர்ட் வளாகத்தில் நிருபர்கள் பார்த்தனர்.
கூட்டணிக்கு ஆசை
ஒருபக்கம் பத்திரிகை சுதந்திரத்தை காக்கவும், நீதியை மதிக்கவும், அவதூறு வழக்கிற்காக கோர்ட்டில் நேரில் ஆஜரானதாக கூறிய கருணாநிதியே, விஜயகாந்த்தின் அநாகரீக செயல் பற்றி வாய் திறக்க மறுத்தார் என்றால், தேமுதிக கூட்டணி பற்றிய ஆசை அவருக்கு இருப்பதே காரணம் என்று சீனியர் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.
மாற்றி யோசி
கருணாநிதிக்கு இந்த ஆசை இன்னமும் இருந்தாலும்கூட, ஸ்டாலின் மற்றும் பல முக்கியஸ்தர்களுக்கு, விஜயகாந்த்தின் போக்கு மாற்றி யோசிக்க வைத்துவருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயகாந்த் வாக்கு வங்கி
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகு நடைபெற்ற மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களில், விஜயகாந்த் வாக்கு வங்கி அதலபாதாளத்திற்கு சரிந்ததை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட நிலையிலுள்ள விஜயகாந்த்தை, தகுதிக்கு மீறி பெரிய நபராக நாம் ஏன் மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் திமுகவில் பலருக்கு வரத்தொடங்கியுள்ளதாம்.
ஏகப்பட்ட கன்டிஷன்கள்
விஜயகாந்த் கட்சி இன்னமும் திமுக பக்கம் சரியாமல் இருக்க சில காரணங்கள் உள்ளன. பீகார் மாநில பாணியில், ஆட்சியை திமுக-தேமுதிக பங்குபோட வேண்டும், அமைச்சரவையில் சரிசம பங்கு, போட்டியிடும்போது திமுகவுக்கு ஈடாக சரி சம தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை தேமுதிக தரப்பு திமுகவிடம் அழுத்தமாக கூறிவருகிறதாம்.
அதெல்லாம் முடியாதுங்க
இதுபோன்ற நிபந்தனைகளை ஏற்று, விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைப்பது என்பது, திமுக தனது தலையில் தானே மண்ணை அள்ளி போடுவதற்கு சமம் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத திமுக முக்கிய புள்ளி ஒருவர் நம்மிடம் தெரிவிக்கிறார்.
விஜயகாந்த்துக்கு போக்கில்லை
அதேநேரம், விஜயகாந்த்தை புறக்கணித்தாலோ, அவருக்கு வேறு வழி கிடையாது என்ற எண்ணம் திமுகவில் வரத்தொடங்கியுள்ளது. அதிமுக பக்கம் விஜயகாந்த் போக முடியாது. எஞ்சியிருப்பது மக்கள் நலக் கூட்டணியும், பாஜக கூட்டணியும்தான்.
விஜயகாந்த் வீழ்ச்சி
மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் போவதற்குத்தான் வாய்ப்பு அதிகம் என்பதால், திமுக ஆதரவு வாக்குகள், அதிமுக ஆதரவு வாக்குகளை தவிர்த்து பொதுவான வாக்குகள்தான் மக்கள் நல கூட்டணிக்கு போகும் என்று கணக்கு போடுகிறது திமுக. அந்த பொது வாக்குகளை கபளீகரம் செய்ய பாமக, பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் இருப்பதால், விஜயகாந்த் கட்சி, வாக்கு கிடைக்காமல் வீழ்ச்சியை சந்திக்கும் என்று அறிவாலய தலைமைக்கு ஐடியா கொடுக்கிறார்களாம் சில உடன் பிறப்புகள்.
வேறு கட்சிய பாருங்கப்பா
திமுக, அதிமுக கண்டுகொள்ளாமல்விட்டால், விஜயகாந்த் தானாகவே வீழ்ச்சியடைந்துவிடுவார். அவரை தகுதிக்கு மீறி உயர்த்திபிடிப்பது உத்தமம் இல்லை என்பதுதான், இப்போது அறிவாலயத்தின் ஹாட் டாப்பிக். எனவே, விஜயகாந்த்குக்கு ஈடான வாக்கு வங்கி கொண்ட கட்சிகளை வலைவீசி தேடும் முயற்சியில் திமுக புள்ளிகள் இறங்கியுள்ளார்களாம்.