20 மணி நேரத்தில் ஹிந்தி கற்றுத் தரும் மதுரை தம்பியண்ணா.. "ஒன்இந்தியா" ஸ்பெஷல்
மதுரை: முப்பது நாளில் ஹிந்தி படிக்கலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஹிந்தி எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள இருபது மணி நேரம் போதும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த விஸ்வநாதன் தம்பியண்ணா என்ற ஹிந்தி ஆசிரியர்.
இதுகுறித்து அவரிடம் "ஒன்இந்தியா - தமிழ்" செய்தியாளர் சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது.
ஹிந்தியில் கேள்வி கேட்கவும், பதில் சொல்லவும் கற்றுக்கொள்ளுதல் என்ற கண்ணோட்டத்தில் வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நான் ஹிந்தியில் கேள்வி கேட்கிறேன். ஹிந்தியில் பதில் சொல்கிறேன். என இனிமையான, ஆச்சரியமான அனுபவமாக இந்த வகுப்புகள் இருக்கும். மேலும் மொழியை மட்டுமல்ல. வாழ்வியல் பயிற்சி, வாழும் திறன் இவற்றையும் நாங்கள் கற்றுத் தருவதால் இருபது நாளில் இருபது மணி நேரத்தில் யார் வேண்டுமானாலும் எளிதில் ஹிந்தி பேச கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லும் தம்பியண்ணா அதற்கான சாத்தியத்தையும் விளக்குகிறார்.
70% ஹிந்தி தமிழ்தான்
ஹிந்தியின் வாக்கிய அமைப்புகள் 70% சதவீதம் தமிழ் போன்றும் 25 சதவீதம் ஆங்கிலம் போன்றும் 5 சதவீதம் பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள் போன்றும் இருக்கும். ஆக, 95 சதவீத வாக்கிய அமைப்புகள் நமக்குத் தெரிந்த மொழிகளிலேயே இருப்பதால் ஹிந்தி கற்பது எளிது. பிறந்த குழந்தை ஓரிரு வயதில் பிரமாதமாக மொழி பேசுகிறது. அதற்கு யார் கற்றுக் கொடுத்தது? 50 சதவீதம் கேள்விகள், 50 சதவீதம் பதில்கள். இதே முறையில் படித்தால் யாரும் மொழியை எளிதில் கற்றுக்கொண்டுவிட முடியும் என்கிறார் தம்பியண்ணா.
மொழியை கற்றுக்கொள்வதால் என்ன லாபம் !
ஒரு மொழியை கற்றுக்கொண்டால் மூளையில் உள்ள செல்களும் புதுப்பிக்கப்படுகிறது. அதனால் ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ளும் போது பொதுவாகவே உங்களை புதுப்பித்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு டாக்சி டிரைவருக்கு தினமும் வெவ்வேறு விதமான பயணம், அனுபவம் வருவாய்.. அதேபோல் பஸ் டிரைவருக்கு தினமும் பணி. ஒரே மொழியை தெரிந்து வைத்திருப்பவர் பஸ் டிரைவர் போல. கூடுதல் மொழியை தெரிந்து கொள்பவர் டாக்சி டிரைவர் போல என்கிறார் தம்பியண்ணா.
தமிழ் - ஹிந்தி அகராதி !
யார் வேண்டுமானாலும் ஹிந்தியை எளிதில் கற்றுக்கொள்ளும் விதமாக தமிழ் - ஹிந்தி அகராதி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார் தம்பியண்ணா. இதன் மூலம் படிப்பவர்களின் சந்தேகங்களை தீர்க்க உதவுகிறது என்று கூறும் தம்பியண்ணா, மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது நகைச்சுவை, முல்லாவின் நீதி கதைகள், உடல் நலன் சார்ந்த விஷயங்கள் வழியாக ஹிந்தி சொல்லிக்கொடுப்பதால் மாணவர்களுக்கும் மனதில் எளிதில் பதிந்து விடுகிறது என்கிறார்.
எலி கதை !
எலி குடும்பம் ஒன்று சுற்றுலா புறப்படுகிறது. அதில் ஒரு சிறு எலியானது வழியில் பூனையை வழிமறிக்கிறது. அதற்குப் பெரிய எலியானது, அனைவரையும் அருகிலுள்ள மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளச் சொல்லிவிட்டு ஒரு கல்லை அருகில் இருக்கும் தகரத்தின் மீது எறிகிறது. அந்தச் சத்தம் கேட்டு நாய் குரைத்ததும் பூனை ஓடிவிடுகிறது. எலிக் குடும்பம் பயணத்தைத் தொடர்கிறது.
சுவாரஸ்ய விளக்கம்
இது வெறும் கதை போலத் தோன்றலாம். ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் தன்னை அறிதல், மற்றவர்களைப் புரிந்துகொள்ளுதல், தொடர்பாற்றல், உறவு பேணுதல், ஆழ்ந்து சிந்தித்தல், ஆக்க சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கல் தீர்த்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல், உணர்ச்சிகளைக் கையாளுதல் ஆகிய பத்து வாழ்க்கைத் திறன்களும் இந்த எலிக் கதைக்குள் இருப்பதாகச் சொல்லி சுவாரஸ்யமாக விளக்குகிறார் தம்பியண்ணா.
சிக்கல் இல்லாத முடிவு
"பெரிய எலி தன்னை அறிவதுடன் மற்றவர்களை பற்றியும் தெரிந்துவைத் திருந்ததால் மரத்தின் பின்னால் ஒளியச் சொல்லி தனது தொடர்பாற்றலை வெளிப்படுத்தி உறவைப் பேணுகிறது. அடுத்ததாக, பிரச்சினையைச் சமாளிக்க ஆழ்ந்து சிந்தித்து ஆக்கத்துடன் ஒரு முடிவை எடுத்துப் பிரச்சினையைச் சிக்கலின்றி தீர்க்கிறது.
மொழி தேவை
தனக்கிருந்த மன அழுத்தத்தைத் தனக்குள்ளேயே கையாண்டதுடன் ‘என்னால்தான் பிழைத்தீர்கள்' என்று உணர்ச்சிவசப்படாமல் ‘நாயின் மொழியும் தெரிந்திருந்ததால் தப்பித்தோம்'என்கிறது பெரிய எலி. ஆகவே, இன்னொரு மொழியும் தெரிந்திருந்தால் அது நமது வாழ்க்கைக்கு நிச்சயம் பயன்படும்.
அண்ணனாக, தம்பியாக
கடந்த முப்பது ஆண்டுகளில் லட்சம் பேருக்கு ஹிந்தி கற்றுத் கொடுத்திருக்கும் தம்பியண்ணா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஹிந்தி கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஸ்கைப் மூலமாக கற்றுத்தருவதாகவும் கூறிகிறார். தன் பேருக்கு ஏற்றாற்போல் மாணவர்களுக்கு உற்ற அண்ணனைப் போலவும் தம்பியைப் போலவும் செயல்பட்டு 20 நாட்களில் 20 மணி நேரத்தில் மாணவர்களை ஹிந்தி படிக்கப் பேச வைத்துவிடுகிறார் விஸ்வநாதன் தம்பியண்ணா.
மதுரைவாசிகள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கூட இவரைத் தொடர்பு கொண்டு பலன் அடையலாமே!
தம்பியண்ணாவை மொபைலில் அழைக்க: 9994866277