246 ஆண்டுகளில் வெறும் 17 ஆண்டுகள் மட்டுமே போரின்றி இருந்த அமெரிக்கா; போரை வணிகமாக மாற்றிய கதை
நியூயார்க்: சீனா-தைவான் மோதல், ரஷ்யா-உக்ரைன் மோதல், வடகொரிய-தென்கொரியா உரசல் இது எல்லாவற்றிற்கும் மூல காரணமாக உள்ள அமெரிக்கா. யார் சார் இந்த அமெரிக்கா? அமெரிக்காவின் போரும் வரலாறும் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது. இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்கள் CGTN எனப்படும் செய்தி ஊடகத்திலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன.
Recommended Video
இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் போர்களை எதிர்கொண்டுள்ளன. அமைதியின் சின்னமாக விளங்கும் ஸ்சுட்டர்லாந்து கூட பல போர்களை கடந்து வந்துள்ளது. ஆனால் எல்லா நாடுகளும் என்றாவது ஒரு நாள் போரை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளும். ஆனால் ஒரு நாடு உருவாகி 246 ஆண்டுகளில் வெறும் 17 ஆண்டுகள் மட்டும் அமைதியாய் இருந்து இதர ஆண்டுகள் முழுவதும் போரில் ஈடுபட்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அமெரிக்கா எனும் அந்நாடு இப்போதும் போருக்காக ஆயுதங்களை உற்பத்தி செய்துகொண்டுதான் இருக்கிறது.
இது போரின் மூலம் செழித்து வளர்கிறது மற்றும் அது போரைப் பணமாக்குகிறது. போர் என்பது அமெரிக்காவின் வணிகம். இரண்டாம் உலகப் போரின் முதல் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. அது வெறுமென ஆயுதங்களை மட்டுமே விநியோகித்து வந்தது. இந்த போரில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டது. இது எல்லாம் 1941 வரை மட்டும்தான். ஒரு புறம் ஜெர்மனியும் மறுபுறம் ஜப்பானும் பெரும் கைகளாக வளர்ந்து வந்தன. இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பேர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. பசிபிக் கடலில் உள்ள இந்த தீவு அமெரிக்காவுக்கு சொந்தமானதாகும்.
இதையடுத்து அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் நாட்டு மக்களிடம், "இந்த தாக்குதலுக்கு எதிரான போர் நம்மை எவ்வளவு காலம் அழைத்து சென்றாலும் பரவாயில்லை. இந்த திட்டமிட்ட படையெடுப்பை முறியடிக்க அமெரிக்க மக்கள் தங்கள் நேர்மையான பலத்தில் வெற்றி பெறுவார்கள்" என்று உறுதியளித்தார். இதனையடுத்து ரூஸ்வெல்ட் தலைமையிலான அமெரிக்க அரசு நாட்டின் பாதுகாப்புக்கான நிதியை சுமார் 42 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியது. இது 1939ல் வெறும் 2 சதவிகிதமாகதான் இருந்தது. இதுதான் வல்லரசு அமெரிக்காவின் துவக்கம்.
இந்த காலகட்டத்தில் அமெரிக்க அரசாங்கம் 175 பில்லியன் டாலர் அளவில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை அந்நாட்டில் உள்ள பெருநிறுவனங்களுடன் போட்டுக்கொண்டது. இதில் வரும் வருமானங்களில் மூன்றில் 2 சதவிகிதம் குறிப்பிட்ட 100 நிறுவனங்களுக்கும், 20% குறிப்பிட்ட 5 நிறுவனங்களுக்கு என பகிரப்பட்டது. இவ்வாறாக இரண்டாம் உலகப் போரில் 4 ஆண்டுகள் ஈடுபட்ட பிறகு, அமெரிக்கா ஒரு நடுத்தர அளவிலான உலக வல்லரசில் இருந்து உலகத் தலைவனாக மாறியது.
இந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் இராணுவ தொழில்துறை மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. இதன் தொடர்ச்சியாக உலக அளவில் முன்னணி ஆயுதத் தொழிலை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. மட்டுமல்லாது, இந்த வளர்ச்சியை விண்வெளி, ஆற்றல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பொறியியல், செய்தித் துறைகளிலும் விரிவுபடுத்தியது. இது குறித்து அந்நாட்டு ஊடகங்களில் ஆஹா ஓஹோ என்றும் எழுதப்பட்டது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அமெரிக்கா தனது பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்க தொடங்கியது. 1948 மற்றும் 1989க்கு இடையில் அமெரிக்க அரசாங்கம் தேசப் பாதுகாப்பிற்காக 10 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் செலவழித்தது. இதில் பெரும்பாலான பணம் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் ஒப்பந்தக்காரர்களின் வங்கிக் கணக்கில் சென்றது. இதனையடுத்து 1961ல் வியட்நாமில் அமெரிக்க ஆதரவு அரசின் இருப்பை உறுதிப்படுத்தவும், கம்யூனிச புரட்சிகளை ஒடுக்கவும் போரில் ஈடுபட்டது. இந்த போரில் முன்னெப்போதையும் விட ஒப்பந்ததாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும் ஏர் அமெரிக்கா போன்ற தனியார் விமானங்களும் இந்த போரில் பங்கெடுத்தன.
இப்படியாக ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய அமெரிக்காவின் வளர்ச்சி 1962 மற்றும் 1970 இடையில் அபரிமிதமாக இருந்தது. இதை கீழ்க்கண்ட தகவல்களை கொண்டு எளிதாக புரிந்துகொள்ளலாம். அதாவது, 1962ல் 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் இருந்த அமெரிக்காவின் ஆயுத விற்பனையானது, 1970ல் 8.55 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இதன் பிறகு 1991ல் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஒரு பெரிய அமெரிக்க தலைமையிலான கூட்டணியுடன் 'ஈராக்கிற்கு' எதிரான 'வளைகுடா போரை' தொடங்கியது.
இது ஈராக்கிற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த போரில் சுமார் 20,000 முதல் 26,000 ஈராக்கிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 75,000 பேர் காயமடைந்தனர். இந்த போரால் ராணுவ மேலாதிக்கத்தை அமெரிக்கா மீட்டெடுத்தது. இதற்கான செலவினங்களை மற்றவர்களிடமிருந்து பெறவும் அமெரிக்காவால் முடிந்தது. இந்த கூட்டு ராணுவ நிதியை பார்த்தால் சிறு குழந்தை கூட அமெரிக்கா ஏமாற்றுகிறது என புரிந்துகொண்டுவிடும்.
அதாவது இந்த 'வளைகுடா போருக்கு' அமெரிக்கா தரப்பில் வெறும் 7 பில்லியன் டாலர்களும், அரபு நாடுகள் தரப்பில் 36 பில்லியன் டாலர்களும் ஜெர்மன் மற்றும் ஜப்பான் நாடுகள் தரப்பில் 16 பில்லியன் டாலர்களும் என மொத்தமாக 61 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் பங்கு வெறும் 11 சதவிகிதம்தான். இந்த போரில் அமெரிக்கா தனது ஆயுத விற்பனையை பலமடங்காக உயர்த்தியது. இதையடுத்து கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பல நாடுகளில் போர்களை அமெரிக்கா தொடங்கியது.
பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 80க்கும் மேற்பட்ட நாடுகளில் 911 போர்கள் மற்றும் மோதல்களுக்கு 6.4 டிரில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இந்த இவ்வாறு 80க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய ஆயுதங்கள் அமெரிக்கா தயாரித்தவைதான். இதன் மூலம் கிடைத்த வருவாய் அமெரிக்காவின் ஒரு குறிப்பிட்ட 5 பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்துள்ளது. 2001-2021 இந்த ஆயுத ஒப்பந்த நிறுவனங்களின் பங்குகள் சுமார் 58% அதிகரித்துள்ளன.
அரபு நாடுகளில் நடத்திய போர்கள் மூலம் கைப்பற்றப்பட்ட எண்ணெய் வளத்தை அமெரிக்கா முழுவதுமாக ஆக்கிரமித்தது. எண்ணெய் விற்பனை முழுக்க முழுக்க அமெரிக்க டாலர்களிலேயே நடந்தன. ஆனால் இதற்கிடையில் சில சர்ச்சைகள் எழுந்தன. 2000ல் சதாம் உசேன் இந்த எண்ணெய் வர்த்தகத்தை டாலர்களிலிருந்து யுரோக்களுக்கு மாற்றினார். ஆனால் அடுத்த 3 ஆண்டுகளிலேயே அவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டார். பின்னர் இந்த வர்த்தகம் மீண்டும் டாலர்களுக்கே திரும்பியது.
இவ்வாறான போர்கள் மூலம் அமெரிக்கா 2001ம் ஆண்டுவரை சுமார் 9 லட்சம் பேரை கொன்று குவித்துள்ளது. இதில் இதில் 3.35 லட்சம் பேர் எதுவும் அறியாத அப்பாவி மக்கள். படுகாயமடைந்தவர்களுக்கு கணக்கே கிடையாது. இந்த போர்கள் கோடிக்கணக்கானவர்களை கட்டாய இடம் பெயர செய்தது. இதனால் உலகம் முழுவதும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவ்வாறுதான் இன்று அமெரிக்கா வல்லரசு நடாக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறது.
நாளை நாம் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், இந்தியா வல்லரசாக வேண்டும் என பல அரசியல் தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே இந்தியா வல்லரசாக வேண்டுமா என்பது குறித்து நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.