பாரதி பக்கம்
மார்ச் 01, 2001
தேசிய கீதங்கள்
கரும்புத் தோட்டத்திலே
தாளம் - தில்ரசாப்பு
ஹரிகாம்போதி ஜன்யம்
பல்லவி
கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே
சரணங்கள்
1.கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே ! - ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்கு கின்றனரே! - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்தி தற்கில்லையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத் தோட்டத்திலே)
2.பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்: தெய்வமே! நினது
எண்ணம் இரங்காதோ?- அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ?- தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கொர்
எண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்.அந்தக் (கரும்பத் தோட்டத்திலே)
3.நாட்டை நிலைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ?- அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர் (கரும்புத் தோட்டத்திலே)
4.நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? ஹே!
வீர காளி சாமுண்டி,காளீ! (கரும்புத் தோட்டத்திலே)