பாரதி பக்கம்
காதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்:
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரூம்:
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்:
கானமுண்டாம்: சிற்பமுதற் கலைக ளுண்டாம்..
ஆதலினால் காதல்செய்வீர்: உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்
காதலினால் சாகம லிருந்தல் கூடும்:
கவலைபோம். அதனாலே மரணம் பொய்யாம்.
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் சேர்த்தான்
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
வரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ!
காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்.
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்:
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்:
இங்குபுவி மிசைக் காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ?
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்:
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
பாடைகட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்:
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுக்கின் றாரே.
காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பகலெல்லாம் இரவெல்லாம் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ?












Click it and Unblock the Notifications