பாரதி பக்கம்
பிப்ரவரி 27, 2001
தேசிய கீதங்கள்
ஜாதீய கீதம் - 2
1.நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூத் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாயந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)
2.தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)
3.கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்
கூடு திண்மை குறைந்தனை என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்புதல் கூட்டுவை,
மாற்றவர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)
4.அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ:
தோளிடை வன்பு நீ, நெஞ்சத்து அன்பு நீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே. (வந்தே)
5.பத்து படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை வருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே)
6.திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை:
மருவு செய்களின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை:
பெருகு மின்ப முடைய குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டனை:
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சலாம்! (வந்தே)