இரவின் நரை
சிலர் வருந்தி கவிதை எழுதுகிறார்கள். சிலர் யோசித்து கவிதை எழுதுகிறார்கள். வெகு சிலருக்கு மட்டுமேஇயல்பாய் கவிதை வருகிறது. அத்தகைய கவிஞர்களில் ஒருவர்தான் பிச்சினிக்காடு இளங்கோ.சிறுபத்திரிக்கைகள், இணைய இதழ்கள் ஆகியவற்றில் உயிர்ப்புடன் எழுதி வரும் இளங்கோவின் கவிதைகளைதோழமை பதிப்பகம் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
இளங்கோவின் கவியாளுமை கவிதைகளில் மட்டுமல்லாது அவர் எழுதிய முன்னுரையில் கூட கோலோச்சிநிற்கிறது. வார்த்தைகள் இவரிடம் சரளமாக வந்து விழுகின்றன. கவிதைக்கான கருவைத் தேர்ந்தெடுத்த பின்பும்,எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்ற வித்தை இவருக்கு அழகாக கைவரப் பெற்றிருக்கிறது.
எதுகை மோனையில் கவிஞருக்கு ஒரு மயக்கம் இருக்கிறது. அதை பயணம் என்ற கவிதையில் அவரே ஒப்புக்கொள்கிறார்.
வாசத்தை
என் வார்த்தைக்கு வரவழைப்பது
ஒரு நியாயத்தினால் அன்றி
தேவையினால் அன்று.
இயற்கையின் மீது கவிஞருக்கு தீராத காதல் இருக்கிறது. பெரும்பாலான கவிதைகளில் இயற்கை பற்றிய வர்ணனைவருகிறது. இயற்கை மீது மனிதன் காட்டும் அசிரத்தை இளங்கோவிற்கு கோபத்தை வரவழைக்கிறது. நூலுக்குத்தலைப்பாகி இருக்கும் இரவின் நரை என்ற கவிதையில், இரவு பகலாக மலரும் அற்புதத்தை விளக்கிவிட்டு, உலகம்தூங்கினால் எப்படி உணரும் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.
ஆகாயம் பச்சை என்ற கவிதையில்,
காற்றையே சலித்தெடுக்கும்
கைதேர்ந்த வித்தை
தாவரங்கள் அறிந்த
விஞ்ஞான விந்தை
----- ----- -----
மதங்களைக் காட்டிலும்
மரங்களை நம்புங்கள்
என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
மனித மனத்தின் நுட்பமான உணர்வுகள் சில கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எளிமை என்றொருகவிதையில்,
நாங்கள்
வரத்திற்காய்த்
தவம் கிடப்பவர்கள்
தவமின்றி
வரமென்றால்
தப்புக் கணக்கே
போடுவோம்
என்ற வரிகள் யதார்த்தத்தின் உச்சம்.
தொடரும் நட்பை துண்டிக்க வழியின்றி, வேண்டா வெறுப்பாய் பழகுவது எல்லாருக்கும் வாய்க்கும் அனுபவம்.இதை கவிஞர்,
நமக்கிடையில்
இடைவெளி என்பது
நதியாய் இருக்கையில்
நட்பு என்றொரு
பாலம் தேவையா?
என்று கேட்கிறார். என்ன ஒரு அழகான உவமை? இடைவெளி ஏற்படுத்திக் கொண்ட அந்த நண்பன் மீது நமக்குபச்சாதாபம் வருகிறது.
ஓரிரு கவிதைகளைத் தவிர்த்து, புத்தகம் முழுவதும் உள்ள கவிதைகளை இதேபோல் எடுத்துச் சொல்லியபடியேபோகலாம். அந்தளவிற்கு பல நல்ல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. வாசித்துப் பாருங்களேன்.
(இரவின் நரை: பிச்சினிக்காடு இளங்கோ, பக்கம் 112, ரூ.40, தோழமை வெளியீடு, 5டி, பொன்னம்பலம் சாலை,கே.கே.நகர், சென்னை-78)